வியாழன், 5 மே, 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 8

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 8
       
தலைவன் விடுத்த அம்பு
…………………………………. வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணிமுகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப
                                           கபிலர், குறிஞ்சிப் .169 – 175
நெடிய கோலையுடைய, உடுச் சேர்ந்த கடுவிசையையுடைய அம்பை, நன்றாக வலித்துத் தலைமையுடைய யானையின் அழகிய முகத்தே எய்தனன். அவ்யானையின் புள்ளியையும், புகரினையும் உடைய மத்தகம் அழகழியுமாறு, அம்புபட்டு உருவிய புண்களால் உமிழப்படும் குருதி, அதன் முகத்தே பரவிற்று, முருகனால் வருத்துதல் உற்ற மகளிர்க்கு, மறியறுத்து ஆடும் வெறியர் களத்தில், குருதி குதிக்குமாறு போலப் பெருகி வெளிப்படலால், அவ்யானை தன்னை மறந்து ஆண்டு நிற்றலாற்றாது புதுகிட்டுச் சென்றது.
( வார் கோல் – நீண்ட கோல் ; உடு – நாணைக் கொள்ளும் இடம் ; பகழி – அம்பு ; வாங்கி – வலித்து ; நுதல் – மத்தகம் ; அணங்குறு மகளிர் – வருந்துதல் உற்ற மகளிர் ;  நெடுவேள் – முருகன் ; ஆடுகளம் ;  வெறியாடல் களம்.)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக