வியாழன், 21 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1170


திருக்குறள் -சிறப்புரை :1170

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.------ ௧௧ ௭0

பிரிந்துசென்ற காதலர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து சென்றடையும்  என் மனம் போல, என் கண்கள் விரைந்துசென்று கண்டு மகிழுமாயின் கண்கள் இங்ஙனம் சிந்தும் வெள்ள நீரினை நீந்திக் கடக்கவும்  வேண்டுமோ..?

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்தன்றோ வருத்தி
வான் தோய்வற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.”குறுந்தொகை

காதலரை நினைத்தால், அவர் பிரிவு என்னும் தீயினால், நினைக்கின்ற என்மனம் வேகா நிற்கும், அவரை நினையாமல் உயிர் வைத்திருந்தால் எம்முடைய ஆற்றலுக்கு உட்பட்டதன்று.
காமநோய் எம்மைச் சாகும்படி வருந்தச் செய்து, வானத்திலும் தோய்வது போன்ற பெருக்கத்தை உடையது. யாம் உள்ளம் பொருந்தியவர் நம்மை அருளாமையால் சால்புடையர் அல்லர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக