செவ்வாய், 26 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1175


திருக்குறள் -சிறப்புரை :1175

 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.------ ௧௧௭௫

கடலே சிறிதெனச் சொல்லும்படியான பெரியதாய காமநோயை , எனக்குத் தந்த கண்கள், இன்று துயிலாது துன்பத்தில் உழல்கின்றன.

கண் தர வந்த காம ஒள் எரி
என்புஉற நலியினும் அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பைக் கோழி தனிப்போர் போல
களைவோர் இலை யான் உற்ற நோயே.” ---குறுந்தொகை.

கண் என்னும் பொறியினால் தரப்பட்ட, காமமாகிய ஒள்ளிய தீ என் உள்ளத்தளவில் நில்லாது,எலும்புவரை அகத்தேசென்று நலிவதாயினும் அவரை விரும்பிக் குறியிடத்திற்குச் சென்று, அவரோடு ஒன்றித் தழுவுவதற்கு அரிய நிலையில், அவரைக் காண்பதற்கும் அரியதாயிற்று. வரைவுடன்வந்து, நம்முடைய வருத்தத்தை நீக்குதலை அவரும் செய்திலர். வெற்றி, தோல்விகளுக்கிடையே விரைந்து வரைந்து கொள்ளுதலும் செய்திலர். குப்பையில் மேயும் கோழிகள், தாமே தனிமையில் நிகழ்த்தும் போரினைப் போல, அதுவாக முடியும் காலத்தில் முடியுமேயன்றி, யான் உற்ற நோயைக் களைவாரில்லையே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக