வியாழன், 11 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1192


திருக்குறள் -சிறப்புரை :1192

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. ------ கக௯௨

தம்மைச் சேர்ந்தொழுகும் மகளிர்க்கு இனிய துணையாகிய கணவர், அவரின் உளமறிந்து செய்யும் நற்செய்கைகள் (தலையளி ) தன்னை நோக்கி உயிர்வாழும் உயிரினங்களுக்கு வானம் வழங்கும் மழையைப் போன்றதாம்.

”……………….உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்ந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே.” ----அகநானூறு.

நீர்வற்றிக்கிடந்த குளங்கள் யாவும் நிறையுமாறு ஓர் இரவில் பெருமழை பெய்தது; தலைவன் வருகையால் யான் பெற்ற மகிழ்ச்சி, இன்பம் மிக்க வைகறைப் பொழுதில் பெய்த மழையால் நிரம்பிய குளங்களைக்கண்ட  ஊர் மக்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சி எல்லாம் ஒரு சேர என்னுள்ளே பெய்துவைத்தாற் போன்று இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக