புதன், 17 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1205


திருக்குறள் -சிறப்புரை :1205

 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். ----- 0

தம்முடைய நெஞ்சகத்து யாம் நுழையாமல் எம்மைக் காவல்கொண்ட காதலர், எம்நெஞ்சகத்து மட்டும் ஓயாமல் வருதற்கு வெட்கப்பட மாட்டாரோ..?

உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் அதன் தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலர் அதற்கு அஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சு ஊர் யாமத்தானும் என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.” ---குறுந்தொகை.

தோழி…! ஆற்றுவாரில்லாத பொறுத்தற்கரிய துயரத்தால், நான் வருந்துவதற்கும் ஆற்றல் இல்லேன். மேலும் பல நாட்கள் துயருழந்து வருந்துவதைவிட, இறந்துபடுவதற்கு அஞ்சுகிறேன். ஐயோ..! இன்னும் நல்ல மலைநாட்டின் தலைவன், இருவரும் பிரியா நண்பினர் என்று பிறர் கூறும் அலர் மொழிகளுக்கு அஞ்சினேனா..? பலர் ஒன்றுசேர்ந்து தூங்கும் இரவுப் பொழுதிலும் யான், தலைவனையே நினைப்பதால், என் நெஞ்சத்திகண் அன்றி, அவன் நேரில் வருவதை அறியான், இவ்வாறு இருத்தல் அவனுக்கு அழகாகுமா… ? கூறுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக