வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-26 அன்பெனும் அருங்குணம்


தன்னேரிலாத தமிழ்-26
அன்பெனும் அருங்குணம்

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.”நற்றிணை.

தம்மை அடைக்கலமாக வந்தடைந்தோர்க்கு, அவர்தம் துன்பத்தைப் போக்கிப் பாதுகாத்து, இனிய தன்மையனாய் இருக்கும் அருங்குணச் செல்வத்தையே , சான்றோர், செல்வம் என்று உயர்த்திப் பேசுவர்.

அம்ம வாழி தோழி அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்… “ --- குறுந்தொகை.
தோழி..! அன்பிற் சிறந்த நம் அன்னைக்குக் கைம்மாறாகக் கருதுமிடத்து உயர்ந்த உலகமாகிய துறக்கமும் சிறிதாகும்.

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.” --- புறநானூறு.

ஒருநாள் அல்ல ; இரண்டு நாள் அல்ல ; பலநாளும் பலரொடும் மீண்டும் மீண்டும் சென்றாலும் முதல்நாள் போலவே அன்பு காட்டும் பண்புடையவன் அதியமான்.

சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல்புணர்வு  உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணமாக.”ஏலாதி.

நண்பர்கள் இறந்தவிடத்து தாமும் பிரிவாற்றாது இறத்தலும் ; வறுமையுற்றபோது பொருள் கொடுத்து உதவி செய்தலும் ; இன்சொல் கூறுதலும்; கூடியிருத்தலை விரும்புதலும் ;  வருந்தும்போது வருந்துதலும் ;  பிரியும் காலத்தில் உள்ளம் கலங்குதலும்  ஆகிய இந்த ஆறு குணங்களும் உண்மையான  அன்புடைய நண்பர்களுக்கு இருப்பனவாகச் சான்றோர் கூறுவர்.

அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்
 பெரும் பேர் அன்பினர் தோழி … “அகநானூறு.

தலைவி.. ! பெறுதற்கரிய பொருள் விருப்பத்தால் தலைவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார் ஆயினும் நம்மீது பேரன்பு உடையவர்.

2 கருத்துகள்:

  1. அன்பெனும் அருங்குணத்தைப் பற்றிய கருத்துக்களை அருந்தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் விளக்கிடும் அரிய பதிவு. இனிய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு