புதன், 22 ஏப்ரல், 2020

இன்று இவர்களைப் போற்றுவோம்....!


இன்று இவர்களைப் போற்றுவோம்....!

உலக வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டிற்குத் தனிச்சிறப்புண்டு. உலகைச் சீர்திருத்தி முன்னேற்றிய அறிஞர்கள் பலர் இந்நூற்றாண்டில்தான் தோன்றினர். அறிவியல், கல்வி, தொழில், சமுகவியல் எனப் பல்வேறு துறைகளில் பெரும்புரட்சியாளர்கள் தோன்றினர். இன்று இவர்களைப் போற்றுவோம்.
பாவேந்தர் : 1891 – 1964

‘பெண்களுக்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே’.
 பெண்கள் கற்றால் குடும்பமே கல்வியறிவு பெறும் ; கல்லாத பெண்கள் வாழும் வீடு ’இருண்ட வீடு’ என்றார்,
’கல்வி இல்லா நிலம்
களர்நிலம் –அங்கே
புல் விளைந்திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை.’...பெண்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கி, அஞ்சி ஒடுங்கி வாழ்ந்தால் வீரமும் மானமும் உடைய    குழந்தைகள் அவர்தம் கருவில் தோன்றுவரோ..?
‘தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே பகுத்தறிவே
எல்லாம் கடவுள் என்று துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செய்ய வந்தவளே’, என்று புதுயுகப் புரட்சிப் பெண்கள் குறித்துப் பாவேந்தர், தன் எண்ணத்தை, ஏக்கத்தைத் தாலாட்டு பாடித் தீர்த்துக் கொள்கிறார்.

வி.. லெனின் : 1870 – 1924

பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான் சமுதாயம் முன்னேறும் என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். லெனின் 12 கோடி தற்குறிகளுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு எழுத்தறிவு புகட்ட முனைந்து செயல் பட்டார். பெண்கள் கல்விக்கூடம் வரத் தயங்கினர். லெனின் அசரவில்லை ‘பெண்கள் இருக்கும் இடத்திற்குப் பள்ளிக்கூடம் போகட்டும்’ என்று ஆணையிட்டார். அவரவர் தாய்மொழியில் (53 மொழிகள்)
கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.
 ‘நாடு முன்னேற மூன்று வழிகள் இருக்கின்றன
முதலாவதாக, படி
இரண்டாவதாக, படி
மூன்றாவதாகவும் படி

இந்த உலகத்தில் லெனின் சாதித்தவற்றுள் மகத்தானது...
படி, படி.....படி என்னும் நன்னெறியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக