செவ்வாய், 9 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…56.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…56.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”கலக்கினும் தண்கடல் சேறாகாது”.

 

கடலை எப்படிக் கலக்கினாலும் அது சேறாகாது; தெளிவாகவே இருக்கும். பால்;, பொன், சந்தனம், அகில், கடல் ஆகிய ஐந்தும் தம் இயல்பில் திரியுமோ?  காய்ச்சினாலும்பால் தன் சுவையில் குன்றாது , உருக்கி ஊற்றினாலும் பொன் தன் இயல்பில் மாறாது; அரைத்தாலும் சந்தனம் தன் மணம் மாறாது ; தீயிலிட்டுப் புகைத்தாலும் அகில் மணம் வீசும் தன்மையில் குறையாது ; குளிர்ச்சி பொருந்திய கடலை எப்படிக் கலக்கினாலும் தன் இயல்பில் மாறாது தெளிவாகவே இருக்கும். அவை போல அறிவிற் சிறந்த பெரியோர் தமக்கு மிகுந்த துன்பம் வந்த போதிலும் தம் உயர்ந்த குணங்களிலிருந்து ஒருபோதும் மாறுபட மாட்டார்கள்.

 

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்

தாம் அறிந்து உணர்க என்ப மாதோ.” – கந்தரத்தனார்,நற்றிணை; 116.

 

கொடிய தீமை செய்வோரைக் கண்டவிட்த்தும் அவர் உள்ளம் வருந்தி இனி அவ்வாறு தீமைகள் செய்யாதிருக்கு என்று பல முறை எடுத்துக்கூறிப் பொறுத்திருப்பர் பெரியோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக