ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…63.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…63.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.”

அன்றாடம் உழைத்தால்தான் அடுத்தநாள் உணவு உண்டு என்னும் நிலைமையில் வறுமையால் வாடும் உழைப்பாளர்களுக்கு ‘ நாள் என் செய்யும் கோள் என் செய்யும்’, அஃதாவது நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ ; நல்ல நேரம் என்றோ, கெட்ட நேரம் என்றோ எதுவும் அவர்கள் பார்ப்பது கிடையாது. நாள்தோறும் வேலைக்குச் சென்றால்தான் மனைவி மக்கள் பசியாற முடியும். எனவே அவர்கள் தெய்வத்தை வேண்டிப் பெற விழைவதில்லை, சகுனம் பார்த்து வேலைக்குச் செல்வதில்லை, நாளும் கோளும் என்ன செய்யும் ? உழைத்தால்தான் உணவு என அவர்தம் வாழ்க்கைப் பயணம் தொடரும்.

 

வறுமையை வெல்லும் வாழ்க்கை.

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை…” – பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை : 18.

ஓர் ஆடையின் ஒரு பகுதியை ஆடையாக உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும், கவலைப்படாது, அன்பினால் குடும்பத்தார் ஒன்றிக்கலந்து,  இல்லறத்தில் பிரியாது என்றும் இணைந்திருப்பவர்களுடைய வாழ்க்கையே வாழ்க்கை ஆகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக