தமிழமுது –302 – தொல்தமிழர் இசை மரபு:162 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.- 1839 – 1898.
இனி வண்ணம் என்பதாவது; சொற்சீரடியாகிய நூலின்கண் பயின்று வருவதாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒலி அளவு ஓசை(மாத்திரை) இருப்பதைப்போல், இசையும் உண்டு என்பதை அறிந்து மகிழுங்கள். சான்றாக வல்லிசை வண்ணம் எனின் வல்லெழுத்து மிக்குவருவது வல்லிசை வண்ணம் ; மெல்லிசை வண்ணமாவது மெல்லெழுத்துக்கள் மிக்கு வருவதாம். ஏனைய வண்ணங்களையும் எழுத்திசை கொண்டு அறியலாம்்.
”வட்டொட்டி யன்ன வனமுடப் புன்னைக்கீழ்க்
கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழைப்பூத்
தொட்டிட்டிக் கொள்ளும் கடற்சேர்ப்பன் நின்னொடு
விட்டொட்டி யுள்ள விடாது நினையுமே
ஒட்டொட்டி நீங்காதே ஒட்டு.” என்று வல்லிசை வண்ணத்திற்கு எடுத்துக்காட்டுகிறது யாப்பருங்கல விருத்தி .
” பொன்னின் அன்ன புன்னைநுண் தாது
மணியின் அன்ன நெய்தலங் கழனி
மனவென உதிரு மாநீர்ச் சேர்ப்ப
மாண்வினை நெடுந்தேர் பூண்மணி யொழிய
மம்மர் மாலை வாநீ
நன்மா மேனி நயந்தனை எனினே.” (மேலது)
என்றது , மெல்லெழுத்து மிக்கதுகொண்டு மெல்லிசை வண்ணமாம்.
சந்தப் பாடல்கள் (வண்ணம்):
வண்ணச்சரபம் என்று அழைக்கப்படும் அளவுக்கு சந்தங்கள் (இக்கால இசைவாணர்கள் சந்தம் என்பதை வண்ணம் என்கின்றனர்) நிறைந்த நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழிசைப் பாடல்கள்:
கர்நாடக இசை ராகங்களுக்கு இணையாகத் தமிழ் மொழிக்கு உயிர்ப்பை வழங்கி, தமிழ் இலக்கண மரபை இசையுடன் இணைத்து பல லட்சம் பாடல்களை இயற்றியுள்ளார். [1, 2, 3, 4, 6] (இணையப்பதிவு.)
.....................................தொடரும்..........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக