செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 16

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 16
கருடன் சம்பா நெல்
வளைக்கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
 உருப்புற பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைப்படப் பெருகுவீர்.
   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  304  – 310
மறைகாப்பாளர் மனைவியாகிய பார்ப்பனி, பதமறிந்து ஆக்கிய பறவைப் பெயர் பெற்ற நெற்சோற்றையும், சேதாவின் நறிய மோரின்கண் எடுத்த வெண்ணெயில் வெந்த மிளகுப் பொடியும் , கறிவேப்பிலையும் கலந்து அட்ட மாதுளங்காய்ப் பொரியலையும் , பசிய கொத்துக்க்களையுடைய நெடிய மாமரத்தினது நறிய வடுவினைப் பலநாளாகப் போட்டுவைத்த ஊறுகாயோடும் வகைப்படப் பெறுவீர்.
 ‘பறவைப் பெயர்ப்படு வத்தம்’ என்றது கருடன் சம்பா என்னும் பெயருடைய நெல்லைக்குறிக்கும் என்பார் நச்சினார்க்கினியர். ‘பறவைப் பெயர்ப்படு வத்தம்’ என்றது இராசான்னம் என்னும் பெயர் பெறுகின்ற நெல்லென்றவாறு. ஆகுதி பண்ணுதற்கு இந்த நெல்லுச் சோறே சிறந்ததென்று இதனைக் கூறினார். இனி மின்மினி நெல் என்பாரும் உளர்.
( சுடர்க்கடை – சுடர் மறையும் பொழுது ;  சேதா – சிவப்பு நிறப்பசு ; கஞ்சகம் – கருவேம்பு ;  நறுமுறி – கறிவேப்பிலை ; வடி – வடு ; தகை – அழகு ; காடி – ஊறுகறி , ஊறுகாய்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக