வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 5

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 5
உப்பு வணிகர்
 எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்
அரும்பொருள் அருத்தும் திருந்துதொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு
பொருகணை தொலைச்சிய புந்தீர் மார்பின்
விரவுவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள்
வரைஊர் பாம்பின் பூண்டுபுடை தூங்க
கரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவு உடை
கருவில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள்
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 66  - 76
உப்பு வணிகர்கள் ஊர்கள்தோறும் செல்லும் நெடிய வழியில் பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக -  மலையில் உள்ளனவும் கடலில் உள்ளனவுமாகிய பயனைக் கொடுத்துப் பெறுதற்கரிய பொருளைப்பெற்றுத் தம் சுற்றத்தாரை நுகரப்பண்ணும் வணிகர்கள் செல்கின்றனர் – அவர்கள் திருந்தத்தொடுத்த தம் வினையின்கண் அசைவில்லாத வலிய முயற்சியைஉடையவர்கள் – தம் கால் மறையும்படி செருப்பு அணிந்தவர்கள் – மெய்ப்பை அணிந்த உடம்பினை உடையவர்கள் -  ஆறலைப்போர் அம்புதொடுத்துப் போர் செய்ய வரின் அவரை எதிர்த்து – அவரது வலியைத் தொலைத்த மார்பினை உடையவர்கள் – மலையில் ஊறும் பாம்பைப் போன்று மார்பின்குறுக்கே கிடக்கும் கச்சின்கண் வெள்ளிய கைப்பிடியை  உடைய ஒள்ளிய வாளினைத் தொங்கவிட்டவர்கள் – உடைவாள் செருகப்பட்டு இறுகிய உடையினை உடையவர்கள் -  வலிய தோளினை உடையவர்கள் – கடம்பின்கண் அமர்ந்த முருகனை ஒத்த வீரத்தையும் வேலேந்திய கையினையும் புறமுதுகிட்டு ஓடாத தன்மையையும் கொண்டவர்கள்.
(மலையில் உள்ளன – மணி, பொன், சந்தனம் இன்னபிற..
கடலில் உள்ளன – முத்து, பவழம், சங்கு இன்னபிற…
அடிபுதை அரணம் – காலை மூடிய செருப்பு
உல்கு – சுங்கப் பொருள்- பண்டைக் காலத்தில் நிலம் கடந்து செல்லும் பொருள்களுக்குச்  சுங்கச் சாவடிகள் இருந்தமை.  )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக