திங்கள், 28 ஏப்ரல், 2025

தமிழமுது -14 - சங்க இலக்கியச் சுவை. மகுளி – இழுகுபறை ஓசை.

 

தமிழமுது -14   - சங்க இலக்கியச் சுவை.

மகுளி – இழுகு பறை ஓசை.

“அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி

வருந்தினை வாழி என்நெஞ்சே பருந்து இருந்து

உயாவிளி பயிற்றும் யா உயர் நனந்தலை

உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்

கடுங்குரற் குடிஞ்ஞைய நெடுபெருங் குன்றம்

எம்மோடு இறத்தலும் செல்லாய் பின்நின்று

ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது

செல் இனி சிறக்க நின் உள்ளம் …”பொருந்தில் இளங்கீரனார் : அகநானூறு, 19. 1-8.

 

 என் நெஞ்சே…. நீ வாழ்வாயாக ..! நாம் புறப்பட்ட நாளன்று யான் வாரேன் என்று கூறி நம் வீட்டிலேயே நீ தங்கினாயும் இல்லை ; எம்முடன் இவ்வளவு தொலைவு வந்து மிகவும் வருத்தமுற்றாய்..!

யா மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள அகன்ற இடங்களில் பருந்து தங்கியிருந்து வழிச் செல்வோர் வருத்தம் அடையுமாறு இடைவிடாது ஒலி செய்யும் ; கடிப்பு உருள்கின்ற இழுகு பறையின் ஓசையினைப் போலப்  பொருள் தெரிய ஒலொக்கும் கடுமையான குரலைக்கொண்ட பேராந்தைகளையுடைய நெடிய பெருங்குன்றத்தை எம்மோடு தொடர்ந்து வந்து கடக்கவும் செய்கின்றாய் இல்லை.

பின்னே நின்று எம்மைக் கைவிட்டு நீங்கக் கருதுவாயானால் தையின்றி இப்பொழுதே செல்வாயாக, நின் உள்ளம் (நினைத்தது பெற்றுச்) சிறப்பதாக…!.

 

(உருள் துடி – கடிப்பு  (குறுந்தடி) உருள்கின்ற இழுகு பறை ; மகுளி – ஓசை  ; பொருள் தெரிய இசைத்தல் – காட்டு வழியில் பொருளுடன் போவார்க்குக் ‘ குத்திப் புதை , சுட்டுக் குவி’ என்னும் பொருள் தோன்ற ஒலித்தல்.; குடிஞை – கோட்டான் , பேராந்தை.)

……………….தொடரும்……………………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக