தமிழமுது –182– தொல்தமிழர் இசை மரபு:42.
தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.
தொல்காப்பியம் : ஆய்வுரை :- கலை வளர்ச்சி:
பொருநர் என்பவர். மற்றொரு பிரிவினர். இவர்களிலே ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர் உண்டு என்று நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.ஏர்க்களம் பாடுதல், ஏருழுது விளைந்த தானியத்தைக் குவிக்கும் இடத்தையும் அவ்விடத்திற்குரிய வணிகர், வேளாளர் , குறுநில மன்னர் போன்றோரையும் புகழ்ந்து பாடுதல். போர்க்களம் பாடுதல் , போர்க்களத்தைப் புகழ்ந்து பாடுத. பரணி பாடுதல் வெற்றி பெற்ற அரசனுடைய பெருமையைச் சிறப்பித்துப் பாடுதல். இவ்வாறு பிறரை ஏற்றிப் புகழ்ந்து வாழ்க்கை நடத்துவோர்க்குப் பொருநர் என்று பெயர்.
இவர்களைச் சேர்ந்த பெண்களுக்கு விறலியர் என்று பெயர் விறல் - வெற்றி ; திறமை. இசை நடனம் முதலியவைகளிலே திறமையுடயவர்கள். கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகிய இவர்கள் அனைவரும் ப்ரே வகுப்பினராகவும் இருக்கலாம். ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்களிலே சிலர் கூத்துப் பழகியவர்கள் சிலர் யாழ் போன்ற இசைக் கருவிகள் வாசிப்பதிலே வல்லவர்கள் ; சிலர் போர்க்களம், ஏர்க்களம், பரணி பாடுவதிலே சிறந்தவர்கள். இவ்வாறு இருந்திருக்கலாம். இவர்களுக்குச் சாதிப் பாகுபாடு இல்லை என்று கூறுகிறார் நச்சினார்க்கினியர். இத்தகைய இசைக்கலை, நாடகக்கலையைத் தொழிலாகக் கொண்ட ஒரு வகுப்பினர் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் நாட்டில் வாழ்ந்தனர்.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்.” (தொல்.பொ.புற.30)
ஆடுவதிலே தேர்ந்த கூத்தரும் பாடுவதிலே சிறந்த பாணரும் புகழ் கூறுவதிலே வல்ல பொருநரும், எல்லவற்றிலும் தேர்ந்த விறலியும் ஆகிய இந்த நால்வரும், வழியிலே தம் கண்ணெதிரே தோன்றிய வறியோர்க்கு தாம் யாரிடத்திலே செல்வம் பெற்றோம் என்பதைக்கூறி அவரிடத்திலே சென்று செல்வம் பெறும்படி கூறிய பகுதியும் என்பதே இந்நூற்பாவின் பொருள். இதனால் இசைக்கலை, நாடகக்கலை நடனக்கலை வளர்ச்சியைக் காணலம்.
நாடக வழக்கினும் .........................
.........................................தொடரும்........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக