தமிழமுது –193– தொல்தமிழர் இசை மரபு:53.
2. குறுந்தொகை. வள்ளைப் பாட்டு : கரடிகை:
“ பாஅடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன்கொல் இப்பேதை ஊர்க்கே
பெரும்பூண் பொறிஅயன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய
நல்லியல் பாவை அன்ன இம்
மெல்லியல் குறுமகள் பாடினள் குறினே.” பரணர் .89.
அச்சம் மிகுவதற்குக் காரணமாகிய கொல்லி மலை பெரிய அணிகலன்களை உடைய சேரனுக்கு உரியது ; கரிய கண்களையுடைய தெய்வத்தால் அம்மலையின் மேற்குப்புறத்தில் எழுதப்பட்ட நல்ல இயல்பையுடைய பாவையைப் போன்ற மெல்லிய இயல்புடையவள் தலைவி ஆவாள் ; அவள் பரந்த அடிப்புறத்தையுடைய உரலில், பகுத்து வாயால் பாடும் வள்ளைப்பாட்டினைப் பாடி உலக்கையை ஓச்சி இடிக்கும் போது அயலார் குறை கூறுதலும் செய்வர்; இத்தகைய அறிவின்மையை உடைய ஊரினர் கூறும் சொற்களுக்காக வருந்திப் பயன் என்ன..?
வள்ளைப்பாட்டு விளக்கம்:
மகளிர் உரலில் நெல், சுண்ணம் ஆகியவற்றை இடிக்கும்போது சோர்வு தோன்றாமைப் பொருட்டுத் தம்முள் பகுத்துப்பாடும் பாட்டு வள்ளைப்பாட்டு எனப்படும். இது பல்வரிக் கூத்து என்ற பகுதியுள் அடங்கும் என அடியார்க்கு நல்லார் கூறுவார், இது உலக்கைப் பாட்டு என்றும் கூறப்படும். உலக்கை ஓச்சி இடிப்பவரின் அன்புக்கு உரியவர் இப்பாட்டின் தலைவராக அமைவர். அரசனையும் தெய்வத்தையும் வள்ளைப்பாட்டில் வாழ்த்திப்பாடும் மரபு உண்டு. போர்க்களத்தில் கூழ் அடும் பேய்களும் இவ்வுலக்கைப் பாட்டை பாடுவதாகப் பரணி நூல்கள் கூறும், வள்ளைப்பாட்டு ஒரு தனி இலக்கிய வகையாகவும் வளர்ச்சியுற்றது.
கரடிகை:
” மட்டம்பெய்த மணிக்கலத் தன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
நட்டைப் பறையின் கறங்கும் நாடன்.”- அரிசில் கிழார் . 193: 1 –3.
கள்ளைப் பெய்த நீலமணியைப் போன்ற நிறமுடைய கலத்தைப் போல, சிறிய வாய்ப்பகுதியை உடைய சுனையின்கண் உளவாகிய பிளந்த வாயினை உடைய தேரைகள், கரடிகை எனும் பறையைப் போல ஒலிக்கும், இத்தகைய நாட்டின் தலைவன். ( கரடிகை - தட்டைப்பறை )
............................................. தொ டரும் .........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக