வியாழன், 5 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 13 - 14

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 13 - 14
எருவை
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன் புற எருவை பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 36 : 7 – 10
 போர்க் களத்தில் – களிறுகளும் குதிரைகளும் வீரர்களும் இறந்துபட அப்பிணங்களை உண்ணும் பொருட்டுப் பொறித்து வைத்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தினையும் புல்லிய புறத்தினையும் உடைய கழுகு இனத்தின் பெண் கழுகுடன் கூடிய ஆண் கழுகு – உச்சிக் கொண்டையை உடைய புல்லூறு என்னும் பறவையுடன் கீழே இறங்கும். ( எருவை – கழுகு : தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து. எருவை போர்க் களத்தில் ஊன் உண்ணும் பொருட்டு இறங்கியது.  மேலும் காண்க : செஞ் செவி எருவை – புறநா.64. அகநா. 193. 77.)

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 14
உலகமொடு உயிர்ப்ப
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்
மா இரும் புடையல் மாக் கழல் புனைந்து
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 37 : 6  – 8
தலைவனே ! மிக உயர்ந்ததும் நல்ல புகழும் உலகம் உள்ள அளவும் அழியாமல் நிலைத்து நிற்க – வறுமையால் வாட்டமுற்ற நின் குடிகளை மேம்பத்திய வெற்றி வீரனே – அரிய பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய வீரக் கழலையும் அணிந்து பகைவர்களை அழித்தொழித்தவனே ! ( சேரனின் பனம்பூ மாலை – புகழ் நிலைக்க  - ஆதாரமாகிய உலகம் அழியின் புகழும் அழியுமாதலின் ”உலகமொடுயிர்ப்ப” என்றார்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக