திங்கள், 2 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 7 - 8

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 7 - 8
நல்ல ஆட்சிக்கு - அழகன்று
சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய்ச் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்
 பாலைக் கெளதமனார். 22 : 1 –  4

  மிகுந்த சினமும் மிகுந்த காமமும் அளவிறந்த இரக்கமும்( தன் கட்சியினரிடத்து) பகைவர்க்கு அஞ்சுதலும் ( மக்கள் முன் தோன்ற )பொய் கூறலும் ( தேர்தல் வாக்குறுதி) பொருளிடத்து அளவுக்கு மிஞ்சிய பற்று வைத்தலும் ( சொத்துக் குவிப்பு ) அளவுக்கு மிஞ்சிய தண்டனை( வரி போட்டு வருத்துதல் )அளித்தலும் - இவை போன்ற இன்னபிறவும் நல்லாட்சிக்குத் தடையாக அமைவன ஆகும்.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 8

மழைக் கோள்
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப
 பாலைக் கெளதமனார். 24 : 23 –  25

விளங்குகின்ற  கதிர்கள் வானத்திலெங்கும் பரந்து ஒளி வீச – வடக்கே சிறிது சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளி என்னும் கோளானது பயன் பொருந்திய பிற கோள்களோடு தனக்குரிய நல்ல நாளிலே மழை பொழிவதற்கு நிற்க…..

 ( மழைக் கோளாகிய வெள்ளி- மழை பெய்வதற்கு ஏதுவாகச் சிறிது வடக்கே சாய்ந்து நிற்குமாறு தோன்ற “ வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி” என்றார். வெள்ளி தெற்கே நின்றால் மழை இல்லை. வெள்ளி – சுக்கிரன். மேலும் காண்க : ”வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும் …… புயன் மாறி வான் பொய்ப்பினும் “ ப.பாலை. 1-2. ஆநியம் – நல்ல நாள். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக