செவ்வாய், 3 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 9 -10

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 9 -10
ஆண்டலை – பறவை
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
பாலைக் கெளதமனார். 25 : 8

பகைவரின் நாடு நின்னால் அழிவுண்டதால் --- காட்டுத் தீ பற்றி அழித்தலால் ஆண்டு ஆண்டலை என்னும் பறவை இயங்க … (ஆண்டலை – இது ஆண்மகனின் தலை போன்ற வடிவமுள்ள பறவை என்பர். ஆண்டலைக் கொடி என்பது முருகனது சேவற் கொடி.- ஆண்டலை நெருப்புக் கோழியாக இருக்கலாமோ ? ஆய்க.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 10
கள்ளுக்கு விலையாக ….
காந்தளஅம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
பாலைக் கெளதமனார். 30 : 9 - 12

காந்தள் பூவினால் செய்த கண்ணியையும் கொலை செய்யும் வில்லினையும் உடைய வேட்டுவர் சிவந்த கொம்பையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு  வலிமையான காட்டு யானையின் கொம்புகளையும் எடுத்துக் கொண்டு செல்வம் பொருந்திய கடைத் தெருவிற்குச் செல்வர். அங்கு தாம் வாங்கும் கள்ளுக்கு விலையாகக் காட்டுப் பசுவின் இறைச்சியையும் யானையின் தந்தத்தையும் கொடுப்பர். ( பிழி – கள் ; நொடை – விலை; நியமம் – கடைத் தெரு; ஆமான் – காட்டுப் பசு. மேலும் காண்க : அகநா. 61 : 9. )
பதிகம்
பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கெளதமனார் பாடினார் பத்துப் பாட்டு – 11 -12

 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பி –பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கொளதமனார் பாடினார் பத்துப்பாட்டு. உம்பற்காடு சேர நாட்டிலுள்ளது.அது வருவாயை உடைய பல ஊர்களைத் தன்னகத்தே கொண்டது. இவன் இருபத்தைந்து ஆண்டுக் காலம் ஆட்சியில் வீற்றிருந்தான். 4/11/15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக