திங்கள், 23 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 2

பரிபாடல் – அரிய செய்தி - 2
உலகத் தோற்றம் - ஒடுக்கம்
தொன்முறை இயற்கையின் மதியொ……….
…………………………   மரபிற் றாக
பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊமூழ் செல்லக்
கருவளர் வானத்து இசையிற் றோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊமூ மூழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
 தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர்பு ஈண்டு அவற்றிற்கும்
 உள்ளி டாகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலுமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி யீட்டம் கழிப்பிய வழிமுறை
கீரந்தையார் . பரிபா. 2 : 1 – 15
ஒன்றற்கொன்று மாறிவரும் இயல்புடைய திங்களும் ஞாயிறும் கெட்டு – விண்ணுலகமும் வெறும் பாழாகி விடப் பின்னர் – வானமும் கெட்டு இல்லையாகச் சிதைந்து ஒடுங்கிய ஊழிக் காலங்கள் பற்பல – முறைமுறையாகக் கழிந்தன –
அவ்வூழிகளின் பின்னர் – அப்பாழினின்றும் வானம் தோன்றிய முதற் பூதத்தின் ஊழியும் – அவ்வானத்தினின்றும் காற்றுத் தோன்றிக் கிளர்ந்து வீசி நிற்கும் இரண்டாம் பூதத்தின் ஊழியும் – அந்தக் காற்றினின்றும் தீத் தோன்றிச் சுடர் வீசிய மூன்றாம் ஊழியும் – அந்தத் தீயுனின்றும் பனியும் மழையும் தோன்றிப் பெய்த நான்காம் பூதத்தின் ஊழியும் –
 ஒடுங்கும் காலத்தே நீரினுள் முழுகி ஒடுங்கிய பெரிய நிலமாகிய ஐந்தாம் பூதம் மீண்டும் அவ்வெள்ளத்தினூடே பீடு பெற்றுத் திரண்டு செறிந்த ஐந்தாம் ஊழியும் – பற்பல எண்ணிறந்தனவாகக் கழிந்த பின்னர் – இந்நிலத்தின் கண்ணே உயிர்கள் தோன்றும் பொருட்டுத் திருமாலே நீ பன்றி உருவம் கொண்டு நீரினுள் முழுகிக் கிடந்த நிலத்தினை மேலே கொணர்ந்தாய்.
விளக்கம்:
 இப்பாடலின்  முதல் நான்கு அடிகளில் உலகத்தின் ஒடுக்க முறை கூறப்படுகின்றது. பாடலில் அழிந்து போன சொற்றொடர் “ ஞாயிறும் கெடுதலால் அழகிழந்து “ என்னும் பொருளுடையது என்பார் பரிமேலழகர்.
 தொல் முறை – தொன்றுதொட்டு நிகழும் முறைமை . உலகம் ஒடுங்குங்கால் – நிலம் நீரினுள் ஒடுங்க ; நீர் தீயினுள் ஒடுங்க ; தீ காற்றினுள் ஒடுங்க ; காற்று வானத்தில் ஒடுங்க ;  வானம் பிரகிருதியில்
ஒடுங்க இம்முறையே ஊழிகள் பலவும் கழிய என்பார்.
 உலகம் ஒடுங்குங்கால் திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் ஒளி இழந்து துகளாகி வான வெளியிலே சிதறிப் போக - நிலம் முதலிய உலகங்கள் பின்னர்ச் சத்தி கெட்டு நொருங்கித் துகள்பட்டு ஒழியும்.
“ Antarctica’s  ice to melt if all fossil fuel is burned “ – A subsequent sea level rise of 200 feet will see London. Paris. NewYork.Hong Kong and Tokyo being submerged. ….. Dr. Caldeira said “ To melt all of Antarctica I thought it would take something like 10000 years.” – Times of India 13/9/15 – P 12.

(இவ்வறிவியல் உண்மையால் நீரால் உலகம் அழியும் என்பதும் – அப்படி அழிந்தும் இருக்கிறது என்பதும் – இத்தகய அழிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்பதும் –அக்கால அளவைத் தொல் ஊழி – பல் ஊழி எனப் பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலத்தை ஊழி என்று சுட்டியதும் தமிழ்ச் சான்றோரின் தொன்மைக்கும் புலமைக்கும் சான்று - உலகத் தோற்றம் – ஒடுக்கம் குறித்த செய்திகளை இன்றைய  அறிவியலோடு ஒப்பிட்டு ஆய்க. ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக