திங்கள், 21 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12
நிலையாமை உணர்த்தல்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்த விழுமியோர் வரினும்
பவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணவன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசை கேட்குவையே
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇய நின் சேண் விளங்கு நல் இசை
  மாங்குடி மருதனார், மதுரைக். 6: 197 – 209

ஒரு பொய் கூறுவதால், உயர்ந்த நிலையையுடைய தேவருலகத்தை, அவர்கள் நுகரும் அமுதத்தோடு பெறும் பேறு கிட்டுவதாயினும், அவற்றைத் தருகின்ற பொய், உன்னைக் கைவிட்டு நீங்கும்படி , நீ மெய்யுடன் நட்புச் செய்தலை உடையாய் –
 முழங்கும் கடலை எல்லையாக உடைய அகன்ற இடத்தைக் கொண்ட இவ்வுலகில் உள்ளவர்களுடன் கூடி, உயர்ந்த தேவர் உலகில் உள்ள தேவர்களும் பகைவராய் வரினும், பகைவர்க்கு அஞ்சித் தாழ்ந்து ஒழுகுதலைச் செய்ய மாட்டாய் –
தென் திசை நிலத்தில் உள்ள மலைகள் எல்லாம் நிறையும்படி, வாணன் என்ற சூரன் வைத்த சீரிய பொருள்திரளைப் பெறுவதாயினும் பிறர் கூறும் பழி நமக்கு வருவதாகுக என்று நீ கருதுவதில்லை –
சிறந்த பொருளைப் பிறர்க்குக் கொடுத்தலாகிய நெஞ்சுடன் புகழை விரும்புவாய் –
ஐம்பொறிகளாலும் நுகரப்படுவனவாகிய , இந்நுகர் பொருள்களுக்கு நின்னோடு என்ன உறவு உள்ளது..?
நின்னிடத்து உண்டாகிய மாயை இனிக் கெடுவதாகுக –
அம்மாயையைக் கொல்கின்ற போர்த்தொழிலில் வல்லவனே –
பெரியதாய் இருப்பதொரு பொருளை யான் உனக்குக் கூறுவல் , அஃது என்னால் காட்டுதற்கு அரிது, அதனைத் தொல்லாணை நல்லாசிரியர் அறிவுறுத்த கேட்பாயாக, வாழ்வாயாக, சேட்புலமெல்லாம் சென்று விளங்கும் உன்னுடைய சிறந்த புகழ், ஒரு காலமும் கெடாமல் நிலை பெறுவதாகுக.
மதுரைக்காஞ்சியின் கருப்பொருள் :- நிலையாமை உணர்ந்து பற்று அறுத்தலே வீட்டின்பத்திற்கு வழி என்பதைப் புலவர் அரசனுக்கு உணர்த்தல்.
 வாய் நட்பினையே – உண்மையுடன் நட்புச் செய்தல் ; ஏணி – எல்லை ; விண்டு – மலை ;  இசை – புகழ் ; முன்னிலை – ஐம்பொறிகளால் நுகரப்படுவனவாய் முன்னிற்கும் பொருள்கள்.)
ஆய்வுக் குறிப்பு : தென் திசை நிலத்தில் உள்ள மலைகள் எல்லாம் நிறையும்படி – என்றது, தென் திசையில் நின்ற குமரிமலை நிலப்பரப்பைக் குறித்தாரா.. ஆய்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக