செவ்வாய், 15 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 6

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 6
கடல் வாணிகம் – சாலி நெல்
வான் இயைந்த இருமுந்நீர்ப்
பேஎம் நிலைஇய இரும் பெளவத்து
கொடும் புணரி விலங்கு போழ
 கடுங்காலொடு கரை சேர
நெடுங்க்கொடி மிசை இதை எடுத்து
இன்னிசைய முரசம் முழங்க
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
 துறை முற்றிய துவங்கு இருக்கை
தெண் கடல் குண்டு அகழி
 சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ  
               மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  75 -88 
மேகங்கள் நீரைப் பருக்குவதற்காகப் படிந்த, பெரிய மூன்று நீர்மையை உடைய. அச்சம் நிலைபெற்று விளங்கும் கரிய கடலில், கடிய காற்றினால் வளைத்து வீசும் அலைகளைக் குறுக்கே பிளந்து செல்லுமாறு நாவாய்களின் பாய்கள் விரிக்கப்படும்.
   அந்த நாவாய்களில் இனிய ஓசையை உடைய முரசும் முழங்கும், பொன் மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருள்களை நாட்டில் உள்ளவர்கள் நுகருமாறு வாணிகம் நன்கு நிலைபெற, அந்நாவாய்கள் கரையை அடையும், நெடிய கொடிகள் பாய்மரத்தின் மேல் ஆடும். கரு மேகங்கள் சூழ்ந்த மலை போல அம் மரக்கலங்கள் கடற்பரப்பில் அசையும்.
இத்தகைய தெளிந்த கடலாகிய ஆழத்தினையுடைய கிடங்கினையும், தலைமை சான்ற உயர்ந்த சாலி என்ற நெல்லின் பெயரைப் பெற்ற சாலியூரைக் கைப்பற்றிக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே.
( முந்நீர் – நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய தொழில் புரிவது ;  சாலியூர் – கடலை அரணாகக் கொண்ட ஒரு துறைமுகம். ; சாலி – உயர்ந்த வகை நெல் / செந்நெல்  ;  புணரி – அலை .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக