சனி, 12 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 3

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 3
தலைச் சங்கத் தமிழ்
தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந.
                         மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  40 – 42
                  பக்க மலையில் விழுகின்ற அருவிகளையுடைய பொதிய மலையில் இருக்கும் கடவுளாகிய அகத்தியர், தமிழ் நாட்டை ஆளாதபடி இராவணனை விரட்டியவர். கிட்டுதற்கரிய வலிமையுடையவர், பழமை முதிர்ந்தவர், அத்தகைய முனிவரின் பின்னவனாய் எண்ணப்பட்டுச் சான்றோனாய்த் திகழும் தகுதியைப் பெற்ற ஒப்பற்றவனே.
                    தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திய இராவணனை, அகத்தியன் பொதியமலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினான் என்பது புராணச் செய்தியாகும்.
 “ பொதியிலின் கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தால் பிணித்து இராக்கதனை ஆண்டு இயங்காமை விலக்கி,”
                         தொல்காப்பியம் – பாயிரம் நச்சினார்க்கினியர் உரை, இதனால், அகத்தியனுடன் தலைச்சங்கத்து இருந்து பாண்டியன் தமிழ் ஆராய்ந்த சிறப்புக் கூறப்பட்டது.
பொதியில் குன்றத்து முனிவன், அகத்தியன். முனிவர்களைக் கடவுளர் எனக் கூறும் வழக்கு உண்டு. அகத்தியனுடன் பாண்டியன் தலச் சங்கத்து இருந்து தமிழ் ஆராய்ந்தமை இறையனார் களவியல் உரையாலும் புலப்படும்.
( குழம்பு – திரள் / கும்பல் ; வாலுவன் – சமையல்காரன் ; துப்பு – வலிமை) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக