சனி, 13 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1019


திருக்குறள் -சிறப்புரை :1019

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.------- ௧0௧௯

ஒருவன் நேர்மை பிறழ்ந்து நடப்பானாயின் அஃது, அவன் பிறந்த குடிப்பிறப்பு ஒன்றையே கெடுக்கும். அவனே நாணம் இல்லாதவனாயின் அவன் குடிப்பிறப்பு உள்ளிட்ட எல்லாச் சிறப்புகளையும் அழிக்கும்.
நற்குடியில் பிறந்தவன் நாண் அழியாமை நன்று.

“ ……………………………………….முன்னாள்
கையுள்ளது போல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக்கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்தி
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்
ஆடுகொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிச்
 செல்வல் அத்தை யானே ………..” ----புறநானூறு.

முதல் நாள் நீ தரும் பரிசில் என் கையிலே வந்தடைந்தது என்ற உணர்வை உண்டாக்கிவிட்டுப் பின்பு பொய்யொடு பொருந்திப் பரிசில் வழங்காத தன்மைக்கு வருந்தி, நீ வெட்கப்படாவிட்டாலும் வெட்கப்படுமாறு கூறி நான் செல்வேன். அவ்வாறு செல்லுங்கால் எனது நுண்ணிய புலமை மிக்க செவ்விய நாக்கு வருந்துமாறு புகழ்ந்து நாள்தோறும், பாடப்பாடப் பின்னரும் பாடவேண்டுகின்ற புகைழைப்பெற்ற உனது வெற்றிமிக்க அகன்ற மார்பை வணங்கிப் போவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக