வெள்ளி, 19 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1025


திருக்குறள் -சிறப்புரை :1025

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. --- ௧0௨

குற்றம் இல்லாதவனாகத் தன்குடியை உயர்த்துவதற்குரிய கடமைகளைச் செவ்வனே செய்து வாழ்கின்ற ஒருவனைத் தம் சுற்றமாகச் சூழ்ந்து உறவு கொள்வர் உலகத்தார்.

”கருங்கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ  சுமந்து
மணி அன்ன நீர் கடற் படரும்
செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந
சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை
தாய் வாழியர் நிற் பயந்திசினோரே” -----புறநானூறு.

கரிய தாள் பொருந்திய வேங்கை மலரின் பொன்போன்ற பூவைச் சுமந்து , பளிங்கு மணி போன்ற நீர் நாள்தோறும் கடலில் சென்று கலக்கும் ; அத்தகைய வளம் பொருந்திய சிறு வெள் அருவியுடைய மலை நாடனே..! நீ வாழ்வாயாக ; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக