வியாழன், 20 டிசம்பர், 2018


இன்பத்துப்பால்
 109. தகையணங்குறுத்தல்

திருக்குறள் -சிறப்புரை :1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. --- ௧0௮௧

இச்சோலையில்  என்கண்முன்னே தோன்றிய இவள், தெய்வமகளோ…எழில் சாயலை உடைய மயிலோ…. குழை அணிந்த மானுடப் பெண்ணோ..? இவளை யார் என்று அறிய இயலாமல் மயங்குகின்றதே  என் நெஞ்சம்…!

“அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்
 பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
திருமணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல் ……….. ………..” ----நற்றிணை.

மிகத் துன்பம் அடைந்த, செவ்விய கோடுகள் படர்ந்த, வளப்பமும் குளிர்ச்சியும் உடைய கண்கள், பல பூக்களால் மாறுபடத் தொகுக்கப்பட்ட தழையாடை அசைய உருத்த அல்குல், அழகிய நீலமணி போலும் மேனி….! இவ்விளம் பெண் யாருடைய மகளோ..?


1 கருத்து:

  1. நம் இலக்கியத்தின் அருமையையும் உங்கள் எழுத்தின் அழகையையும் தொடர்ந்து வாசிக்கிறேன், ரசிக்கிறேன், ஐயா.

    பதிலளிநீக்கு