செவ்வாய், 7 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1244


திருக்குறள் -சிறப்புரை :1244

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்காண லுற்று. ---- ௨ ௪ ௪

நெஞ்சே…!காதலரைக் காணவேண்டுமென்று கண்கள் துயிலாது  என்னைத் தின்பன போன்று வருத்துகின்றன; நீ அவரிடம் செல்லும்போது இக்கண்களையும் உடன் அழைத்துக்கொண்டு போவாயாக.

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பல்நாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுலன் நல்நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே.” ---குறுந்தொகை.

ஒருநாள்,இருநாள் தொடர்ந்து பலநாட்கள் வந்து, பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பலகால் யான்விரும்புமாறு கூறினன்.  மலையில் முதிர்ந்த தேனைக் கொள்பவர், த்தேன் உள்ள அடையையும் உடன்கொண்டு செல்வதுபோல, எனது நல்ல அன்பு கலந்த நெஞ்சத்தையும் உடன்கொண்டு சென்றான். எனக்குத் துணையாகிய தலைவன் யாண்டு உள்ளானோ..? வேற்றுநாட்டின் புலத்தில் பெய்த ஏறுடை மழையைப் போல,என் நெஞ்சம், அவன் உள்ள இடத்தில் நின்று கண்ணீர் பெருக்கி அழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக