வியாழன், 30 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1290


திருக்குறள் -சிறப்புரை :1290

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. ---- ௨ ௯0

முதலில் என்னைக்கண்ட அளவில் கண்ணினால் மட்டும் கலங்கிப் பிணங்கினாள். பின்னர்  என்னைக்கண்டதும் என்னைவிட விரைந்துவந்து, தன் ஊடலை மறந்து என்னைத் தழுவினாள்.

கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன  ஒதுக்கினள் வந்து
பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல் எறி பொன்னிற் கொங்கு சோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே.” ----அகநானூறு.

நெஞ்சே..! அலர் அஞ்சி,  கடல் மீன்கள் துயிலும் நள்ளிரவில், அழகு கிளர்ந்த பொலிவினையுடைய செய்தொழிலால் சிறந்தபாவை, நடை கற்றாற் போன்ற நடையினளாய், மெல்ல மெல்ல வந்து, மழையின் அலைத்தலால் கலங்கிய பூ மாலையினின்றும்  உலைக்களத்து அடிக்கும்பொழுது தெறித்து விழும் பொன் துகள் போல், தேன் துளித்து விழ,  யாழ் நரம்பின் ஒலிபோல, இனிய மொழிகளைக்கூறி,  வட்டமான முலைக்கண்ணில் வடுவுண்டாகத் தழுவினாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக