செவ்வாய், 28 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1285


திருக்குறள் -சிறப்புரை :1285

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து. ---- ௨ ௮ ௫

கண்ணுக்கு மை தீட்டும் போது அஞ்சனக் கோலினைக் காணமுடியாத கண்ணேபோல் கணவனை நேரில் காணும்போது, அவருடைய தவறுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்றுகெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது
கடவுட் கற்பின் அவனெதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே.” ---குறுந்தொகை.

தோழி..! நெடிய திரட்சி உடைய தோளில் அணிந்த வளையை நெகிழச் செய்த கொடுமை உடையோனாகிய குன்ற நாடன், பரத்தையர் வீட்டிலிருந்து நின்னைக் காண வருங்கால், நின்னுடைய கடவுள் தன்மையுடைய கற்பு திரியாமல், இனிய முகம் மலர்ந்து எதிர்கொண்டு பேணுதலால், நீ உறுதியாக அறியாமை உடையவள் ஆயினை என்று, என்னை வினாவி, என்பால் வருத்தமுறாதே. அறிவ்வான் அமைந்தவர் தம்முன்னர்ப் பிறர் புகழ்ந்து கூறும் மொழிகளைக் கேட்க நாணமடைவர். அத்தகைய மென்மையுடையவர், பழியைக்கண்டு உரைக்குங்கால், எங்ஙனம் தாங்கும் வலிமையுடையர் ஆவரோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக