புதன், 29 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1287


திருக்குறள் -சிறப்புரை :1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. ----- ௨ ௮ ௭

தம்மை இழுத்துக்கொண்டுபோகும் என்பதை அறிந்திருந்து ஓடும் வெள்ளத்தில் பாய்பவரைப்போல, காதலரோடு பிணங்குவதில் பயனில்லை என்பதை அறிந்திருந்தும் அவரோடு பிணங்குவதில் என்ன பயன் உடைத்து..?

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறைதிறன் அறியாளாகி ஒய்யென
நாணுனள் இறைஞ்சி யோளே பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே.” –அகநானூறு.

அன்புமிக்க நெஞ்சமொடு போர்வையைக் கவர்தலின், உறையினின்று எடுத்த வாளைப்போல, அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறையும் வகை அறியாதவளாகி, ஆம்பல் பூவின் முறிக்கப்பட்ட இதழ்களால் தொடுத்த  பருத்த நிறம் பொருந்திய மாலையை நீக்கி, வண்டுகள் ஒலிக்கும் ஆராய்ந்த மலரினைச் சூடிய, நீண்ட பலவாய கூந்தலின் இருளால், மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, விரைவாக நாணி விருப்புற்று இறைஞ்சினாள் ..! அத்தகையாள் இன்று நாம் பல கூறி உணர்த்தவும் உணராது ஊடுகின்றாள் ; இவள் என்ன உறவினள் நமக்கு..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக