வியாழன், 9 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1247


திருக்குறள் -சிறப்புரை :1247

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு. --- ௨ ௪௭

நன்னெஞ்சே..! ஒன்று, தலைவரோடு கொண்ட காமவிருப்பை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு, காமவிருப்பு, நாணத்தடுப்பு இவ்விரண்டினையும ஒருசேரப் பொறுத்து ஆற்றியிருத்தல் முடியாது.

வேரும் முதலும் கோடும் ஓராங்குத்
தொடுத்தாற் போலத் தூங்குபு தொடரிக்
கீழ்தாழ்வு அன்ன வீழ்கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்
அகலினும் அகலாதாகி
இகலும் தோழி நம்காமத்துப் பகையே.” –குறுந்தொகை.

தோழி…! வேரினும் அடியினும் கொம்பினும் ஒன்றுபோலத் தொகுக்கப்பட்டன போலத் தொங்குவதாகவும் தொடர்வதாகவும் கீழ் விழுந்து வணங்குவது போலத் தரையைத் தீண்டும் கிளைகளை யுடைய பலா மரங்கள் நிறைந்த, மலைநாட்டுத் தலைவன், நம்மை விரும்பி வருவான், அவன் வரும்போதெல்லாம், நம் காமவிருப்புடன் உடனுறையும் அதன் பகையாகிய நாணம், நம்கண் தோன்றும். அந்நாணம், தலைவன் அகன்றாலும் நம்மை விட்டு நீங்காமல், காமவிருப்பை விடு அல்லது என்னை விட்டுவிடு என என்னோடு மாறுபடுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக