திங்கள், 27 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1283


திருக்குறள் -சிறப்புரை :1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண். --- ௨ ௮ ௩

தலைவர், நம்மை விரும்பி மதிக்காது, தாம் விரும்பியவற்றையே செய்யினும் அவரைக் காணாது கண்கள் அமைதி பெறுவதில்லையே..!

குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரை
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கை சிறுகுடை கோலி கீழிருந்து
சுட்டுபு  நக்கியாங்கு காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.” –குறுந்தொகை.

குறுகிய தாளினையுடைய கூதங்கொடி, காற்றால் அசைகின்ற நெடிய மலையில் இருக்கும் பெரிய தேனடையை கண்ட  கால்களற்ற முடவன், தன்னுடைய உள்ளங்கையக் குழித்துக் கொண்டு, அம்மலையின் கீழிருந்தபடியே தேனடையைக் கைவிரலால் சுட்டிக்காட்டித் தன் உள்ளங்கையை நாவினால் நக்கி இன்புற்றாரைப்போல, நம் காதலர் அத்தேன் போலத் தன்னைத் தருதலும் செய்யாது, நம்மை விரும்புதலும் செய்யார், ஆயினும், பல காலங்களில் அவரைக் கண்ணால் கண்டிருத்தல் நம் உள்ளத்திற்கு இனிமை தருவதாய் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக