புதன், 6 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 26

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 26
மதுரை மாநகர் - உணவு வகைகள்
……. …….. ……..  …….பலவுடன்
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேம் மாங்கனியும்
பல்வேறு உருவின் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடு கவினி
மென்பிணி அவிழ்ந்த குறுமுறி அடகும்
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயின் நுகர
                        மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 527 – 536
இன்னும் பலவுடன், தேனும், மணமும் உடைய பலாப்பழத்தின் சுளையும், வடிவு வேறுபட்ட, அழகுடைய இனிய மாவின் பழங்களும், பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய வாழைக்காய், வழுதுணங்காய் முதலிய காய்களும் ; வாழைபழம் முந்திரிகைப் பழம் முதலிய பழங்களும் ; மழை, உரிய பருவத்தில் பெய்து வளர்க்கையால் கொடிகள் விட்டு, அழகு பெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய இலைக்கறிகளும் ; இனிய பாகினால் கட்டிய அமுதம் திரண்டாற் போன்ற        இனிய சாற்றினைக் கொண்ட கண்ட சருக்கரையும் ; புகழ்ச்சியுண்டாகச் சமைத்த பெரிய இறைச்சிசி சோறும் ஆகியவற்றை நிலத்தின் கீழ் விளைந்த கிழங்குகளுடன் பல இடங்களிலும் நுகர இனிய பாற்சோறு, பால் முதலியவற்றைக் கொண்டுவந்து இடுவோர் எழுப்பும் பேரொலியும் சோறிடும் சாலைகளில் நிறைய…
( சேறு – தேன் (பலாப்பழத்தின் இனிய நீர்) ; அடகு – இலை ; கடிகை – கண்ட சருக்கரை ;  பண்ணிய – சமைத்த ; இன்சோறு – பாற்சோறு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக