வெள்ளி, 15 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 35

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 35
மன்னனை வாழ்த்துதல்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தி..
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பல்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுர்றமொடு பொலிந்து இனிது விளங்கி
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
 பெரும் பெயர் மாறன் தலைவனாக
கடந்து அடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயல்நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த
மறம்மிகு சிறப்பின் குறுநில மன்னர்
அவரும் பிறரும் துவன்றி
பொற்பு விளங்கு புகழ் அவை நிற்புகழ்ந்து ஏத்த
இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியை யே. 
             மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 767 – 780
நற்பொருள்களை விளங்கக்கூறிய நூல்களைக் கற்று, எவ்வுலகத்திலும் நின் புகழை நிற்குமாறு செய்து, கடல் நடுவில் தோன்றும் ஞாயிறு போலவும், பல விண்மீன்களுக்கு நடுவில் தோன்றும் நிறைமதியைப் போலவும், உன்னால் பொலிவு பெற்ற சுற்றத்தாருடன் நல்ல புகழை இவ்வுலகில் நிலைநிறுத்திய, புனைந்த மாலையையும், பெரிய புகழினையுமுடைய மாறன் முதலாக, பகைவரை  வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய  இளைய பலராகிய கோசரும், எல்லோராலும் புகழப்பட்ட பொன்னால் செய்யப்பட்ட  பேரணிகலன்களை உடைய ஐம்பெருங்கேளிரும் உட்பட, மறம் மிக்க குறுநில மன்னர்களாகிய அவரும் இன்னபிறரும் நடக்கின்ற நெறிமுறையால், உன்னுடைய உண்மையான மொழியைக் கேட்டு அதன் வழி நடக்கவும், பொலிவு பெர்று விளங்கும் அறம் கூறு அவையத்தார் நெருங்கி நின்று, நின்னுடைய அறத்தின் தன்மையை புகழ்ந்து வாழ்த்தவும், விளங்கும் அணிகலன்களை உடைய மகளிர், பொன்னால் செய்த வட்டில்களில் ஏந்தி, மணம் கமழும் காம பானத்தைத் தர, அதனை உண்டு மகிழ்ச்சி எய்தி, மகளிர் தோள் புணர்ந்து, பெருமானே, நன்றாகிய ஊழிக்காலத்தை, இத்துணைக் காலம் இருத்தி எனப் பால்வரை தெய்வத்தால் வரையப்பட்டு, நீ அறுதியாகப் பெற்ற நாள்  முழுதும் இனிதாக இருப்பாயாக.
( தேறல் – கள்ளின் தெளிவு ; நாப்பண் – நடுவில் ; ஐவர் – ஐம்பெருங்குழு ; மாறன் – பாண்டியன்  - முன்னோன் ;ஊழ் – வரையறுத்த வாழ்நாள்.) 16/4/16

மதுரைக் காஞ்சி --- முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக