செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 32

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 32
கள்வர் – தோற்றப்பொலிவு
இரும்பிடி மேஎந் தோல் அன்ன இருள்சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலைவாளர் தொடுதோல் அடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி
சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்
நிலன் அகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும்
                             மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 634 – 641
கள்வர்கள், கரிய பெண்யானையின் தோலைப்போன்ற கரு நிறத்தைத் தமக்கு  இயல்பாகக் கொண்டவர்கள்.
கல்லையும் மரத்தையும் அறுக்கும் நிலத்தை அகழும் கூர்மையான உளியை உடையவர் ;  உறையில் இட்ட வாளினை உடையவர் ;  செருப்பு அணிந்தவர் ;  மிக்க கருமையான மெல்லிய சேலையை உடம்பில் பொருந்துமாறு உடுத்தியவர் ; தொடையில்  வெளிப்புறம் தெரியாமல் கிடக்குமாறு கூரிய உடைவாளைச் செருகியவர் ;  பலநிறங்களைத் தன்னிடத்தே கொண்டதால் புனையப்பட்ட நீலநிறக் கச்சினைச் சேலையின் மேல் கட்டியவர் ;  மெல்லிய நூலால் செய்த ஏணியைத் தம் இடையில் சுற்றியிருப்பர் .  பேரணிகலன்களை விரும்பி அவற்றை எடுப்பதற்காக இடம் பார்த்துச் சுழன்று திரிபவர் ; விழித்த கண் இமைத்த அளவில்  மறைபவர்.
( நிலன் அகழ் உளி – கன்னக்கோல் ; துணிக்கும் – துண்டாக்கும் ; தொடலை – தூக்கு / உறை ; தொடுதோல் – செருப்பு ; குறும்பிடி – வளைந்த கத்தி / உடைவாள் ; ஒடுக்கம் – ஒடுங்கியுள்ள இடம்.) 

1 கருத்து: