சனி, 31 மே, 2025

தமிழமுது -43 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முடிவுரை:

 

தமிழமுது -43 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முடிவுரை: முருக வழிபாடே- முதன்மை வழிபாடு;

 பழங்கால குறவர், எயினர் போன்ற (Food Gatheres) பயித்தொழில் மேற்கொண்ட காலத்திலேயே முருக வழிபாடு தோன்றிவிட்டது.

சேவல்தான் முதன்முதலில் காலத்தால் முந்திய நூல்களில் முருகனது அடையாளம். இஃது ஓர் இனக்குறி (Totemic Symbol )

மயில் பின்னாளில் வந்தது. முதலில் முருகன்  நோய் தீர்க்கும் சக்தியாகவே போற்றப்பட்டான்.

மேற்கூறிய சான்றுகள் முருக வழிபாட்டின் தொன்மையையும் உண்மையையும் தெரிவிக்கின்றன.

……………………………தொடரும்……………………….  

வெள்ளி, 30 மே, 2025

தமிழமுது -42 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முடிவுரை: முருக வழிபாடே- தொன்மை வழிபாடு

 

தமிழமுது -42 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முடிவுரை: முருக வழிபாடே- தொன்மை வழிபாடு;

சிவன், குமரன் என்று சொல்லப்படும் தெய்வங்கள் முற்கால மக்களுள் சிறந்தவராய் இருந்திருத்தல் வேண்டும்.அவர்தம் ஆற்றலாலும்  ஞானத்தாலும் பெருமை பெற்று நாளடைவில் வழிபாடு கொள்ளத் தொடங்கி, இறுதியில் அவர்தம் வரலாறு மறைய தெய்வங்களாயினர் என்று கொள்வதற்குப் பல ஆதாரங்கள் உண்டு என்பர்.

தமிழரின் முருக வழிபாடும் ஆரியரின் ஸ்கந்த சண்முக வழிபாடும் தொடக்கத்தில்  வெவ்வேறு வழிபாடாக இருந்தது, பிற்காலத்தில் இரண்டும் இணைந்து கலப்புர்றுத் திராவிட ஆரிய கலப்புதான் இக்காலத்து முருக சுப்பிரமணிய வழிபாடு.

முருக வழிபாடு உலக இன்ப வாழ்க்கையைப் பெறுவதற்காகவே செய்தனர். வீடு பேற்றைக் (முக்தி) கருதி மக்கள் வழிபடவில்லை. பழங்கால முருக வணக்கமும் பரிபாடல் முருக வணக்கமும் வேறுபடுகின்றன. முருகனைச் சிவகுமாரன் என்று பிற்காலச் சைவ நூல்கள் கூறுகின்றன.   மால்மருகன் என்று பிற்கால வைணவ  நூல்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் இருபெரு சமயங்களும் முருகனோடு தங்கள் தனிப் பெருந்தெய்வங்கள் உறவு கொண்டுள்ளதாகக் கூறும். அந்த அளவிற்கு முருக வழிபாடு செல்வாக்குப் பெற்றிருந்தது.

தமிழ்நட்டில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய ஆதிச்சநல்லூர் தாழி அடக்கம் காலத்திலேயே முருக வணக்க முறை இருந்தது.  சங்க இலக்கிய வழி முருகனுக்கு ஒரு மனைவி இருந்ததை

 முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல “ – நற்றிணை . 82.

பரிபாடல் காலத்திற்குப் பின்னரே முருகனுக்கு இரு மனைவியர்.

………. ………………….தொடரும் …….

வியாழன், 29 மே, 2025

தமிழமுது -41 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு . முருகன், கொற்றவை, சிவன்

 

தமிழமுது -41 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

. முருகன், கொற்றவை, சிவன்

சிவன் ……தொடர்ச்சி …

சைவ சித்தாந்தம் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பிந்தான் தெளிவாக அறியப்படுகிறது எனினும் சங்க இலக்கியங்களில் “சிவன்” எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை குறிப்பாகவே குறிக்கப்படுகிறான்.  தொல்காப்பியர் சிவனைப்பற்றி யாதும் கூறவில்லை.

”நீலமணி மிடற்று ஒருவன்” – புறநானூறு :56.

”காரி உண்டிக் கடவுள் “ – மலைபடுகடாம்.

”தாழ் சடையன் “ - புறநானூறு : 1.

” கொன்றைமாலையன்”- புறநானூறு : 5.

 “ ஆலமர் மடவுள் “ - புறநானூறு :138.

தெற்கில் பொதிய மலை ; வடக்கில் கைலாயமலை.

சிவன், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் முந்தியவன். தமிழ்ச் சங்கம்  காலம், கி.மு.10490  என்பர். இச்சங்கத்தைத் தோற்றுவித்துத் தலைவராய் இருந்தவர் சிவன், இத்தனை பழமை சிறப்புயுடைய சிவன் எந்தச் சங்க இலக்கியத்திலும் குறிக்கப் (பெயரால்) பெறவில்லை.; குறிப்பாகவே உணர்த்தப்படுகிறார்.

ஆடை புலித்தோல் – குளிர் தாங்க

பூச்சு – சாம்பல் – குளிர் தாங்க.

உணவு – காய்கனி இலை – சைவ உணவு.

 சாத்திரங்கள் தோன்றிய பின்பு, சித்தர்களின் சிவன், பக்தர்களின் சிவன் ஆனான்.

 சித்தர்கள் இயக்கத்தின் தலைவனாக சிவன் இருந்திருக்க வேண்டும்.. அன்பு நெறியே சிவன் நெறி; அதுவே தமிழர் நெறி . சிவ வழிபாடு காலந்தோறும் மாறி, சமயச் சின்னங்களைப் பெற்றது.

சிவன் உடல் வலிமையுடன் மன வலிமையும் பெற்றவராக விளங்கியதோடு வான சாத்திரம், மருத்துவம் முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். கோடையில் இமயமலையில் – குளிர் காலத்தில் வேறிடம் செல்வது, ஏழை எளியவர்களுக்கு உதவுதல், இமயமலையை ஆண்ட அரசனின் மகளை மணம் புரிந்துள்ளார். சிவன் புராண நாயகன் இல்லை, வரலாற்று நாயகன் என்பர். சிவன் சித்தர் இயக்கத்தின் தலைவன் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை:

………. ………………….தொடரும் …….

புதன், 28 மே, 2025

தமிழமுது -40 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு . முருகன், சிவன், கொற்றவை:

 

தமிழமுது -40 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

. முருகன், சிவன், கொற்றவை:

முருகன்:

சங்க இலக்கியங்களில் செவ்வேள் சிறப்பிடம் பெறுகிறார்.  தமிழர் இயற்கையை வழிபட்டனர் என்பதற்கு செவ்வேள் சான்று, கல் தோன்றி மணதோன்றிய நிலை. மலை மக்கள் இயற்கை அழகில் ஈடுபட்டு முருகனைப் படைத்தனர். முருகன் குறிஞ்சிக்கு மட்டும் கடவுளன்று, நில வேறுபாடின்றி அனைவரும் வழிபட்டனர்.

சேய் – குழந்தை, சேய்மை, செந்நிறம். மாயோனுக்கு மாலன் என்ற பெயரும் சேயோனுக்கு வேலன், முருகன், வேள் என்ற பெயர்களும்; இந்திரனாகிய வேந்தனுக்கு வானவன் என்ற பெயரும் இயமனாகிய கூர்ற்றத்துக்கு மடங்கல், மறலி, என்ற பெயர்களும் ; கொற்றவைக்குப் பழையோள், காடுகாள் (காடுகிழாள்) என்ற பெயர்களும் தனித் தமிழ்ச் சொற்களால் இத் தெய்வ வழிபாடு இந்நிலத்திருந்தன.

காலை இளஞாயிறு செவ்வேள் (முருகன்) நீலக்கடற் பரப்பு – மயில், கடும்பகல் வெம்மைக் கதிர் சிவன் என்பர்.

 முருகன் வீரமிக்கக் கடவுளாகச் சங்க நூல் கூறும். வெல்போர் சேஎய் – வெல் போர்க் கொற்றவை சிறுவ – கடம்பமர் நெடுவேள் என வருவதறிக.

 

கொற்றவை:

கொற்றவை வெற்றித் தெய்வம்

கொற்றம் – வெற்றி ; அவ்வை – அம்மை.

வெற்றித் தாயாகிய  இவளை வணங்குவதைக் ”கொற்றவை நிலை’ என்கிறார் தொல்காப்பியர் போருக்குச் சென்ற தலைவன் வெற்றி பெற்று மீள, கொற்றவையை வழிபட்டதை நெடுநல்வாடை கூறுகிறது. சேர மன்னர் அயிரை மலையில் உறைந்த கொற்றவையை வழிபட்டான் என்பதைப் பதிற்றுப்பத்து கூறும்.    

சிவன்:

 சங்க காலச் சிவனும் சிந்து சமவெளிச் ச்சிவனும் ஒன்று ; வேதகாலச் சிவன் வேறு. அவன் உருத்திரன் (அச்சம் தருபவன்) சிவன் தமிழரின் கடவுள் ; சைவம் தமிழரின் நெறி.. சிவன் – சிவப்பு  ; சமண பெளத்த வருகைக்கு முன்பே சைவநெறி இருந்தது…………. ………………….தொடரும் …….

 

செவ்வாய், 27 மே, 2025

தமிழமுது -39 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு சிவன், முருகன், பலராமன், கண்ணன்.

 

தமிழமுது -39 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

சிவன், முருகன், பலராமன், கண்ணன்.

. எட்டுத்தொகை நூல்கள் :

8புறநானூறு.

 

தமிழ்நாட்டில், குறிஞ்சி நில மக்களுக்கு முருகக் கடவுளும் ; முல்லை நில மக்களுக்குத் திருமாலும் ; மருத நில மக்களுக்கு இந்திரனும் ; நெய்தல் நில மக்களுக்கு வருணனும் தெவங்கள் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.”

 

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கூறப்படும் கடவுளர் நால்வர்.


 ஞாலம் காக்கும் கால முன்பின்

தோலா நல்லிசை நால்வர்.” - நக்கீரர் பாடிய புறநானூறு 56 ஆம் பாடல் :


1). இடபக்கொடியும் கிணச்சிப் படையும் மணிமிடறும் உடையசிவபெருமான்.


2). வால்வளை மேனியும் கலப்பைப் படையும் பனைக்கொடியும் உடைய பலராமன்.


3). நீலமணிஒக்கும் மேனியும் கலுழக் கொடியும் உடைய கண்ணன்.


4.) மயிலாகிய கொடியும் மயில் ஊர்தியும் உடைய முருகவேள்.

இந்நால்வரும் உலகத்தைப் புரப்பாராகக் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியச் சமுதாயம் சமயம் என்னும் சொல் வழக்கைப் பெறவில்லை. மதம் என்ற சொல் கோட்பாடு அறிவு, செருக்கு எனப் பல பொருள் தருகிறது. சமுதாயம் முழுமையும்  மக்கள் நம்பிய நெறிகள் வழிமுறையாகப் பெற்று வந்தவையே.

 இயற்கை வடிவினை எல்லாம் தெய்வம் உரையும் நிலையாகக் கண்டனர். எவையெல்லாம் அவர்க்கு அருளும் மருளும் பயந்தனவோ அவையெல்லாம் தெய்வமாயின. தத்தம் நிலச் சூழலுக்கேற்ப வாழ்வியலோடு தொடர்புடைய தெய்வங்களை வணங்கினர்.

தெய்வங்களிடம் காதலுக்குத் துணையாக, நோய் தணிக்க, மழை பொழிய, விருந்து பெற வேண்டினர்.   

 சிவன், பலராமன் நிலத் தொடர்பின்றி பொதுநிலையில் கூறப்பெற்றுள்ளனர். மரங்களிலும் மலைகளிலும் பண்புமிக்க தெய்வம் உண்டென்பது பண்டையோர் நம்பிக்கை. தினைப்புனத்தே முதலில் விளையும் கதிர்களைத் தெய்வத்திற்கெனவிடுதல் மரபாகும். கூற்றம் அச்சம் தரும் கடவுளாகக் கருதப்பட்டது.  பென்ணின் பெருங்கற்பு கடவுள் கற்பெனப்பட்டது. காடுகிழாளாகிய கொற்றவையும் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனும் தமிழ் நிலத்தின் தொன்மைத் தெய்வங்கள்.

 சங்க இலக்கியங்களில் தெய்வம் என்ற சொல்  வணங்கிக் கொள்ளும் உருவையும் ; கடவுள் என்பது உள்நிறை ஆற்றலையும் குறிப்பதாகக்கொள்ளலாம். கல்லிலும் மலையிலும் மரத்திலும் வானமீனினும் வேள்வித் தீயிலும் கடவுள் பொருந்தியிருப்பதாகக் (பதிற்றுப்பத்து) கண்டனர்.      

முருகன், சிவன், கொற்றவை:  

……………………………தொடரும்……………………….          

திங்கள், 26 மே, 2025

தமிழமுது -38 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன், வழிபாடு.

 

தமிழமுது -38 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு எட்டுத்தொகை நூல்கள் :

7) .அகநானூறு:

இந்நூலில் 21 இடங்களில் முருகனைப்பற்றிய குறிப்புகள் டம்பெற்றுள்ளன.

 

முருகனுக்குரிய பொதியமலை,  , முருகன் பரங்குன்றம் முதலிய  செய்திகளும் கடவுளை வாழ்த்தி வேண்டல், தெய்வங்களுக்குப் பலியிடல், பிறை தொழுதல், கதிரை வணங்குதல் இன்னபிற செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

கொல்லிப்பாவை வழிபாடு :

வெல்லும் வேல், கொல்லும்படையுடைய சேரன் கொல்லிமலை, அருவி நீர் உடைய மலையின் அகன்ற இடம் அழகுற தெய்வமாக அமைந்த கொல்லிப்பாவை . – அககநானூறு – 62.

வெறியாட்டுக் களம் :

 தாயானவள் தலைவியின் நோய் நீக்க, முதுமை வாய்ந்த பொய்கூறல் வல்ல கட்டுவிருச்சியராகிய பெண்டிர், பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்று கூறலின் அதனை வாய்மையாகக் கருதி அத்தெய்வத்திற்குப் பூசனை செய்தனர். அகம் – 98.

முருகன் – சேயோன்:

முருகக் கடவுள் மிக்க செந்நிறம் உடையவர் என்பது சேய் , செவ்வேல்  என்னும் பெயர்களாலும் பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு, பவழத்தன்ன மேனி  என்பவற்றாலும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும் அவ்வானத்தை ஒட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பில் அணிந்த முத்தாரமும் உவமமாயின. – அகம். 120.

எழுத்துடை நடுகல்:

நிரை மீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக்கொண்ட நடுகல்லை வழிபட்டனர் . அகம்–131. -   மேலும் காண்க:,    179. -269, -297.

நெடியோன் முருகன் :

“ ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து. :” –அகம் . 149.

முருகன் பரங்குன்றம், நெடியோன்  முருகனை நெடியவன் என்பார் நச்சினார்க்கினியர்.

சிவனை வழிபடல்  ;

நான்மறை முதுநூல் முதல்வன் முக்கண் செல்வன் ”- உலகம் யாவும் போற்றும் நல்ல புகழை உடைய நான்கு வேதங்களைக்கண்ட பழம்பெரும் நூலைத் தந்தருளிய மூன்று கண்களை உடைய சிவபெருமானை வழிபடும் சிறப்பினை உடையது சோழநாட்டில் உள்ள ஆலமுற்றம் எனும் ஊர்,

திருமால் வழிபாடு :

 

‘நேர்கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்” –அகம் . 175.

நிரம்பிய ஆரங்களைக்கொண்ட சக்கரப் படை யுடைய திருமால் வழிபாடு குறிக்கப்பட்டுள்ளது.

கதிரைத் தொழுதல் :

“பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு.. அகம் – 298.

உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பல கதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பலவகை தொழில்களைத் தருமாறு வலமாக எழுந்து, நீர்முக்க் கடலிலே தோன்றினாற்போல…… !  வாழ்த்தி வணங்கினர் என்க.

ஞாயிறு, 25 மே, 2025

தமிழமுது -37 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன், காமன் வழிபாடு.

 

தமிழமுது -37 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு.

முருகன், காமன் வழிபாடு

எட்டுத்தொகை நூல்கள் :

1.)     பதிற்றுப்பத்து ;

சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய இந்நூலில் முதற் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை. மன்னர்களின் போரும் வெற்றியும் வாரிவழங்கும் வள்ளல் தன்மையும் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடிய குமட்டூர்க் கண்ணனார் முருகனைப்போல் யானை மீதேறி வந்ததை ஓர் உவமையால் விரிதுரைக்கின்றார். “ சூருடை முழுமுதல் தடிந்த பேரிசை ; கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு..”  அஃதாவது, சூரபதுமனாதன் தன்மையை உடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும் புகழையும் மிகுந்த சினத்தினையும் வெற்றியினையும் கொண்ட முருகப்பெருமான் தனக்குரிய ஊர்தியாகிய யானையின் மீதேறி அதனைச் செலுத்தினது போல அரசன் வெற்றிக்களிப்பில் வலம் வந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

 கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் புகழ்ந்து பாடிய பரணர் “ கடவுள் நிலைய கல் ஓங்கு நெடுவரை ; வட திசை எல்லை இமயம் ஆக ..’ அஃதாவது கடவுள் நிலையை உடைய ஓங்கி உயர்ந்த பக்க மலைகளைக் கொண்ட இமயம் வட திசை எல்லையாகவும் தெற்கில் குமரி எல்லையாகவும் கொண்ட பெரும் நிலப்பரப்பை வெற்றி கொண்டவன் செங்குட்டுவன் என்று கூறினார் ;

தொல்தமிழர் நடுகல் நட்டுக் கடவுள் வழிபாடு செய்தமையைக் குறிப்பிட்டுள்ளார்.

பல யாகங்களையும் பெரிய அறச் செயல்களையும் செய்து முடித்தவன் சேரன் வாழியாதன். கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன். அத் தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினைத் தேவதானமாக்க் கொடுத்தவன் என்கிறார் கபிலர்.

மேற்குறித்துள்ள சான்றுகளால் தமிழர் , முருகன் வழிபாடு, நடுகல் வழிபாடு, திருமால் வழிபாடு ஆகியவற்றை வழிபட்டனர் என்பது தெளிவாகின்றது.

6.)கலித்தொகை:

இந்நூலில் காமனைக் குறித்து 8 பாடல்கள் ; காமனுக்கு வேனிற்காலத்து விழா எடுத்தல், விருந்து அயர்தல், மரக் கொடியை ஏற்றுதல், காமன் படை விடுதல், காமனுக்குக் கோயில் இருந்ததையும்  அறிமுடிகிறது.

பலராமன், கண்ணன், திருமால், சிவன், முருகன், ஆகிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

காமனை வழிபடுதல், தமிழர் வழிபாட்டு நெறியில் சிலப்பதிகாரத்திற்குச் சற்று முற்பட்ட நிலையாகும்.

………………………..தொடரும்…………….

சனி, 24 மே, 2025

தமிழமுது -36 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன் . வழிபாடு.

 

தமிழமுது -36 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன் . வழிபாடு.

 

எட்டுத்தொகை நூல்கள் :

1.)     நற்றிணை:

 இந்நூலில், 12, பாடல்களில் முருகன், வேலன், வெறியயர் களம் இடம்பெற்றுள்ளது. “வழிபடு தெய்வம் கண்கண்டாங்கு “ எனவரும் நற்றிணை உவமை தனக்கென ஒரு குடியினர் ஒரு தெய்வத்தை வரையறுத்து வணங்கிய பழக்கத்தைக் குறிக்கிறது.

2.)     குறுந்தொகை:

இந்நூலில், 5, பாடல்களில் முருக வழிபாடு பர்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளது. முருகு உறையும் குன்றம் போற்றல், வேலனை அழைத்து வெறியயர்தல், முருகனை ‘பெருந்தெய்வம்’ என இந்நூல் சுட்டும்.”பார்ப்பன மகனே பார்ப்பன மகனே” என்னும் பாடல் தமிழர் வைதிகச் சமய நெறிக்கு மாறான நெறியினர் என்பதைக் காட்டுகிறது.

 

3.)     ஐங்குறுநூறு:

இந்நூலில் 12, பாடல்களில்  முருகவழிபாடு சுட்டப்படுகிறது. மனையுறை கடவுள் , குல முதல்வன் முருகன். குறவர்களின் குல முதலாகக் கருதப்பட்டான். முருக வழிபாடு குறித்து நடுகல் வழிபாடும் கூறுகிறது.

4.)     பரிபாடால் :

இந்நூலில் 24 , பாடல்களில் தெய்வ வழிபாடு குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. “திருமாலுக்கு – 7 ; முருகனுக்கு – 8 ; வையைக்கு -9.  அரசரைப் போற்றி வழிபாடு செய்து கொண்டிருந்த நிலையிலிருந்து தெய்வத்தைப் போற்றிப் பரவும் நிலையை இந்நூலும் திருமுருகாற்றுப்படையும் தெளிவாகக் காட்டுகின்றன. சமயநிலைக்காலம் நோக்கி இலக்கியப்புனைவு நகர்தலை இந்நூல்வழி காணலாம். உலகத்தோற்றம், தெய்வத் தோற்றம் பற்றிய புராணக் கதைகள், தேவர், அசுரர், பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன. வைதிகச் சமயக் கருத்துகளின் தாக்கத்தை இந்நூலில் காணலாம் , முருகன் பிறப்பு முற்றிலும் புராணத்தைத் தழுவி உரைக்கிறது.

………………………..தொடரும்…………….

வெள்ளி, 23 மே, 2025

தமிழமுது -35 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன் .

 

தமிழமுது -35 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன் .

பத்துப்பாட்டு – தொடர்ச்சி…!

9.) பட்டினப்பாலை:

 கரிகால் பெருவளத்தான் புகார் நகரில் இருந்த கோயில், குளங்கள் இந்நூலில் சுட்டப்படுகின்றது. நகர் வாழ்வில் வைதிகக் கலப்புத் தெரிகிறது. எனினும் தமிழர்களுக்கே உரிய வழிபாட்டில் பரதவர்கள் (நெய்தல்,) சினைச் சுறாவின் கோடு நட்டு வழிபட்டனர்.  முருகனுக்கு வெறியயர்தல் குறிக்கப்படுகிறது.

 

 10.) மலைபடுகடாம்:

முருகனுக்குக் குறவர் குரவை அயர்தல் ; மலை வழிபடுவார் குறிஞ்சிபாடிக் கை தொழுது பரவிச் செல்லுதல், நாட்காலையில் கள் குடித்த குறவர்கள் தம் மனைவியருடன் கூடி , மான் தோல் போர்த்த சிறு பறையைக் கல் என்னும் ஓசை உண்டாகுமாறு அடித்து வானத்தைத் தீண்டும் உச்சி மலையில் ஆடும் குரவைக் கூத்தின் ஆரவாரமும் ஒலிக்கும். பண்டைத் தமிழர் பாடலும் ஆடலுமாக இறைவனை வழிபட்டனர்.

 

எட்டுத்தொகை நூல்கள் :

………………………..தொடரும்…………….

வியாழன், 22 மே, 2025

தமிழமுது -34 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்—அறுபடைவீடு.

 

தமிழமுது -34 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்அறுபடைவீடு.

 

 மேற்கூறியவறு நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் முருகனின் வரலாற்றை வரைந்துள்ளார். தமிழ் இலக்கியங்களில்  குறிக்கப்பட்டுள்ள தமிழர்தம் வழிபாடு, புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. ஆரிய மயமாக்கப்பட்ட தமிழர் கடவுள் வழிபாடு குறித்துத் தெளிவாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.

பத்துப்பாட்டு நூல்களூள் முதலில் இடம்பெற்ற திருமுருகாற்றுப்படையத் தொடர்ந்து பிற நூல்களில் இடம்பெற்ற முருகவழிபாடு குறிப்புகளைக் காணலாம்.

2.) பொருநராற்றுப்படை:

பொருநராற்றுப்படையில் நான்கு இடங்களில் கொற்றவையும் முருகனும் சுட்டப்பட்டுள்ளனர்.

 

3.) சிறுபாணாற்றுப்படையில் மூன்று இடங்களில் முருகவாழிபாடு  குறிப்பிடப்பட்டுள்ளது.

4.) பெரும்பாணாற்றுப்படியில், முருகனைப்போலும் மறவர் காவல் செய்தனர். கொற்றவையின் மகன் முருகன் என்னும் கருத்து வளர்ந்த நிலையை இந்நூல் சுட்டுகிறது.

5.) முல்லைப்பாட்டு ;…………………………..

.

6. ) மதுரைக்காஞ்சி, திருமால் திருவோண நாளில் பிறந்தவன் என்று கூறுகிறது.  மக்கள் துன்பம் நீங்க வேலன், முருகனை வேண்டி ஆடிப் பாடுவது கூறப்பட்டுள்ளது.

7.)நெடுநல்வாடை, மாலையில் பெண்டிர் நெல்லும் மலரும் தூவி இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளுவி இல்லுறைத் தெய்வத்தை வழிபட்டனர்.

 

8.)குறிஞ்சிப்பாட்டு, பழந்தமிழர் முருக வழிபாட்டு முறையைத் தெளிவாகச் சுட்டுகிறது.

 தலைவியின் தனிமைத் துயரம் தோழியை மிகவும் வருத்தியது. மகளின் துயர் அவள் தாயை  வருத்த  தாயும் மிகவும் மனம் வருந்தி, அகன்றை இடத்தையுடைய  இவ்வூரில்  குறி சொல்லும்  கட்டுவிச்சி, வேலன்  ஆகியோரை அழைத்துக் கேட்டாள், அவர்களும் தலைவியின் வருத்தம் தெய்வத்தால் வந்தது என்று கூறினர். தாயும் வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களுக்கு மணப்புகை, சந்தனம் முதலியன கொடுத்துப் பரவியும் வணங்கியும் பல நிறப் பூக்களைச் சிதறியும் வழிபட்டும் செய்த முயற்சிகளால் அந்நோய்க்கான காரணத்தை அறிய இயலாது வருந்தினாள். நோய்க்குக் காரணம் தலைவனே என்பதைத்  தோழி அறிவாள்.

………………………..தொடரும்…………….

புதன், 21 மே, 2025

தமிழமுது -33 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்—அறுபடைவீடு

 

தமிழமுது -33 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்அறுபடைவீடு.

4.)     பழமுதிர் சோலை :

மதுரை அழகர்மலை முருகன் ,” பழமுதிர்சோலை இன்ன இடம் என்பது தெளிவாகத் தெரியவில்லை; மதுரைக்கு ஏறத்தாழ 15கி.மீ. தொலைவில் உள்ள அழகர் கோயில் அல்லது திருமாலிருஞ்சோலை மலையே பழமுதிர்சோலை எனக் கூறுவர் அறிஞர் ஆனால், அத்தலம் இப்போது வைணவத் திருப்பதியாக உள்ளது.

முருகனை வழிபடுதல் :

ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.” – 245 – 249.

 

வெறியாட்டுக் களம் ஆரவாரிக்கும்படி பாடி ஊது கொம்புகள் பலவற்றையும் ஒருசேர ஊதி ; மணியை ஒலித்து ; முருகப் பெருமானுடைய யானையை வாழ்த்தி ; குறை வேண்டினார் தாம் வேண்டியவற்றைப் பெற்றார்போன்று நின்று வழிபாடு செய்ய ; முருகப் பெருமான் அவ்விடங்களில் தங்குதலும் உரியன்.

 

(சிலம்புதல்ஒலித்தல் ; கொடுமணிவளைவு பொருந்திய மணி ; வாய்வைத்துஊதி.)

 

( பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர்; பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.)

 

 மேற்கூறியவறு நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் முருகனின் வரலாற்றை வரைந்துள்ளார். தமிழ் இலக்கியங்களில்  குறிக்கப்பட்டுள்ள தமிழர்தம் வழிபாடு, புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. ஆரிய மயமாக்கப்பட்ட தமிழர் கடவுள் வழிபாடு குறித்துத் தெளிவாகச் சிந்திக்க வேண்டுகிறேன்.

………………………..தொடரும்…………….

செவ்வாய், 20 மே, 2025

தமிழமுது -32 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்—அறுபடைவீடு.

 தமிழமுது -32 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்அறுபடைவீடு.

முருகன் எழுந்தருளல்:

மயில்கண்டன்ன மடநடை மகளிரொடு

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்

செயலைத் தந்தலிர் துயல்வரும் காதினன்

கச்சினன் கழனினன் செச்சைக் கண்ணியன்

குழலன் கோட்டான் குறும்பல் லியத்தன்

தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம்

கொடியன் நெடியன் தொடியணி தோளன்

நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு

குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்

மருங்கில் கட்டிய நிலனேர்பு துகிலினன்

முறவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி

மென் தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே,” – 205 – 217.

 

 முருகன், சிவந்த மேனியன் ; சிவந்த ஆடையை உடையவன் ; அசோகினது தளிர் அணிந்தவன் ; வீரக் கழலைத் தரித்தவன்வெட்சி மாலையைச் சூடியவன் ; புல்லாங்குழலை இசைப்பவன் ;

 பெரிய கொம்பை ஊதுபவன் ; வேறு பல இசைக் கருவிகளையும் இசைப்பவன் ; ஆட்டுக்கிடாவை வாகனமாக உடையவர் ; மயிலை ஊர்தியாகக் கொண்டவன் ; குற்றமற்ற சேவல் கொடியை உயர்த்தவன் ; நெடிய உருவம் படைத்தவன் ; தொடி என்னும் அணியைத் தோளில் அணிந்தவன் ; இடையில் நறிய மென்மை மிக்கதாகிய ஆடையை நிலத்தளவும் புரளும் வண்ணம் தரித்தவன் ; முழவை ஒத்த பெரிய கைகளால் மான்பிணை போலும் பல மகளிரைத் தழுவிக்கொண்டு அவர்களுக்கு முதற் கை கொடுத்து மலைகள் தோறும் சென்று விளையாடுதல் முருகக் கடவுளின் நிலைத்த குணமாகும்.

( தகர்ஆட்டுக்கிடா ; குல்லைகஞ்சங்குல்லை ; வாலிணர்வெள்ளியப் பூங்கொத்து ; செய்யன்சிவந்த மேனியன்.)

………………………….தொடரும் ……………………………….

திங்கள், 19 மே, 2025

தமிழமுது -31 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்—அறுபடைவீடு.

 

தமிழமுது -31 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்அறுபடைவீடு.

4.)     குன்றுதொறு ஆடல்

(மலைகளுக்கெல்லாம் பொதுப் பெயர்.)

குறிஞ்சியில் விழா:

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்

அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்

கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்

நீடமை விளந்த தேக்கள் தேறல்

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர.” – 190 – 197.

  முருகனுக்குப் பூசை செய்யும் வேலன், பச்சிலைக் கொடியால் நல்ல மணமுடைய சாதிக்காயை இடையிடையே சேர்த்து அதனோடு அழகிய புட்டிலைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் வெண்டாளிப் பூவையும் சேர்த்துக் கட்டிய தலைமாலையை உடையவனாய் நிற்க, நல்ல மணங்கமழும் சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடையவரும் கொடிய தொழிலைச் செய்பவருமான குறவர்கள் நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி, நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவை , மலையிடத்துள்ள சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, தங்கள் குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டகப் பறையை அடித்து, அவ்வோசைக்கேற்பக் குரவைக் கூத்தாட , முருகக் கடவுள் எழுந்தருளுகின்றான்.

(நறைக்காய் – சாதிக்காய் ; குளவி – காட்டுமல்லிகை ; புட்டில் – (போன்ற) தக்கோலக்காய்; கேழ் – நிறம். )

முருகன் எழுந்தருளல்:

………………………….தொடரும் ……………………………….

ஞாயிறு, 18 மே, 2025

தமிழமுது -30 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்—அறுபடைவீடு.

 

தமிழமுது -30 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்அறுபடைவீடு.


4.)         திரு ஏரகம்  - அந்தனர் என்போர்.

 

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல. “ 177 – 182.

 

 ஓதல் முதலிய அறுவகைத் தொழில்களைச் செய்தலிலே வழுவாமல், உலகத்தார் மதிக்கின்ற பல்வேறு பழங்குடிப் பிறப்பினராய்  நாற்பத்தெட்டு ஆண்டுகள் நல்ல இளமைக் காலம் முழுவதும்  வேதம் கூறும் வழியில் பிரமசரியத்தைக் கைக்கொண்டு கழித்தவர்களும் , அதன்பின் இல்லற வாழ்க்கையில் பயின்ற கோட்பாட்டினை உடையவர்களும் மூன்றுவித வடிவுடைய குண்டத்தில்  மூன்று வகைத் தீயால் உண்டாக்கிய செல்வத்தையும் , இரு பிறப்பினையும் உடைய அந்தணர்கள், தாங்கள் வழிபட வேண்டிய முக்காலமும் அறிந்து பூணூலையும் புலராத ஆடையையும் அணிந்துகொண்டு தலைமேல் குவித்த கையினராய் முருகப் பெருமானைப் புகழ்ந்து துதித்து, சரவணபவ என்னும் வேத மந்திரத்தை நாவால் பலமுறை ஒலித்து வழிபட…!


( திருவேரகம் – இதனை மலை நாட்டகத்தொரு திருப்பதி என்றார் நச்சினார்க்கியர் ; அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் தலமே ஏரகம் என்பார்,)

………………………….தொடரும் ……………………………….

 

வெள்ளி, 16 மே, 2025

தமிழமுது -29. - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு

 

தமிழமுது -29. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்-    அறுபடைவீடு

3. ) திரு ஆவினன் குடிபழனி / பொதினி.

 

முனிவர்கள் தோற்றப் பொலிவு:

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு

வலம்புரி புரையும் வால்நரை முடியினர்

மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்

உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்

பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்

தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு

கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை

யாவது அறியா இயல்பினர் மேவரத்

துனி இல் காட்சி முனிவர்….” – 127 – 137.

 

மரவுரியை உடுத்தவர் ; வலம்புரிச் சங்கை ஒத்த அழகிய நரை முடியை உடையவர் ; அழுக்கின்றி விளங்கும் திருமேனியை உடையவர் ; மானின் தோலைப் போர்த்தவர் ;  சதை வற்றிய மார்பில் விலா எலும்புகள் தோன்றி அசையும் உடலை உடையவர் ; பல பகற் பொழுதுகள் உண்ணும் உணவை நீக்கியவர் ; பகையைப் போக்கிய மனத்தை உடையவர் ;  கற்றறிந்தவர்க்கும் தாம் எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர் ; ஆசையையும் கடுங்கோபத்தையும் நீக்கிய அறிவுடையவர் ; எவரிடத்தும் வெறுப்பு இல்லாத மெய்ஞானத்தை உடையவர் ஆகிய இயல்புகளை உடைய முனிவர்கள்.

(சீரை – மரவுரி ; சீர் – அழகு ; உரிவை – தோல் ; இகல் – மாறுபாடு ; செற்றம் - பகைமைக்குணம்  ; துனி – வெறுப்பு. )

முருகனைப் பாடும் ஆடவர் – தோற்றப் பொலிவு:

”புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை

முகைவாய் அவிழ்ந்த நகைசூழ் ஆகத்து

செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்

 நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர.” – 138 – 142.

 

 பாலாடையன்ன நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூந்த மார்பினை உடையவர் ; தமது எஃகுச் செவியால்  இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினை உடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மை உடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய பாடுநர் இனிய யாழ் நரம்பினை இயக்கிப் பாடுவர்.

( ஆகம் – மார்பு ; எஃகு – கூர்மை ; யாழோர் – யாழ்ப்பாணர்.)

 

 முருகனைப் பாடும் மகளிர்  தோற்றப் பொலிவு:

“நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்

அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்

 பருமம் தாங்கிய பனிந்து ஏந்து அல்குல்

மாசுஇல் மகளிரொடு மறுவின்றி விளங்க.” – 143 – 147.

 

 பாடும் மகளிர், நோயில்லாது நல்ல உடம்பினை உடையவர் ; மாந்தளிரை ஒத்த நிறத்தை உடையவர் ; பொன்னுரை போன்று மிளிரும் தேமலை உடையவர் ; நல்ல ஒளிமிக்க மேகலையை அணிந்த அல்குலை உடையவர் ; பாடினியர் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே செல்வர்.

(பருமம் – மேகலை ; அவிர்தல் – விளங்குதல் ; திதலை – பசலை / தேமல். )

முருகனை வணங்குவோர் :

 முருகப் பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள் முன்னே செல்ல, அவர்களைப் பின்பற்றிக் கந்தருவரும் அவர்தம் மகளிரும் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே பின்னால் வர, அவர்களுக்குப் பின்னால் திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர்.

  ( முருகனின் தந்தை சிவபெருமான் இல்லையோ….?)

……………….தொடரும்……………………………..

புதன், 14 மே, 2025

தமிழமுது -28. - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்- – அறுபடைவீடு

 

தமிழமுது -28. - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்-    அறுபடைவீடு

 

2,) திருச்சீரலைவாய்திருச்செந்தூர்.

யானை ஊர்தி.

“வைந்நுதி ஒருத வடுஆழ் வரிநுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர

படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை

கூற்றத் தன்ன மாற்றுஅரு மொய்ம்பின்

கல்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டு” – 78 – 83.

 

கூரிய அங்குசத்தால் குத்தப்பெற்ற தழும்புகள் நிறைந்த செம்புள்ளிகள் மிக்குடைய மத்தகத்தில் பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய. தாழ்ந்து தொங்கும் மணீகள் மாறி மாறி ஒலிக்கின்ற பக்கங்களையும் விரைவான நடையினையும் கூற்றுவனை ஒத்த வலிமையினையும் ஓடும்போது காற்று எழுந்து செல்வது போன்ற வேகத்தையும் உடைய யானையின் மீதேறி முருகன் வருகின்றான்.

 

( முருகன் யானைக் கொடியுடையோனை வென்று அடக்கியதால் யானை ஊர்தியாக இருக்கலாம்.)

 

ஆறுமுகத்தான் ஆற்றும் செயல்கள்:

“மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகி

காதலின் உவந்துவரம் கொடுத்தன்றே ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி

திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி

கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றன்றே ஒருமுகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந் தன்றே

ஆங்கு அம்மூஇரு முகனும் முறை நவின்று…” – 91 – 103.

 

  பல சுடர்களைத் தோன்றச் செய்த்து – ஒருமுகம்.

வேண்டும் வரம் அளிக்கும் – ஒரு முகம் .

அந்தணர் வேள்வியைக் காக்கும் – ஒரு முகம் .

 வேத நூல்கள் காட்டாத எஞ்சிய பொருள்களைக் கூறும்- ஒரு முகம்

மறக்கள வேள்வியை விரும்பி நிற்கும் – ஒரு முகம்.

 வள்ளியம்மையுடன் மகிழ்ந்திருக்கும் – ஒரு முகம்.

 

 (முருகன் என்றுமே வள்ளி மணாளந்தான் ; தெய்வானை எங்கிருந்து வந்தாள் ..?  முருகனை இழிவுபடுத்தும் புனைந்துரைகளைத் தமிழர்கள் புறந்தள்ள வேண்டும்.).

 

3. ) திரு ஆவினன் குடி – பழனி / பொதினி.

……………….தொடரும்……………………………..