ஞாயிறு, 25 மே, 2025

தமிழமுது -37 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன், காமன் வழிபாடு.

 

தமிழமுது -37 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு.

முருகன், காமன் வழிபாடு

எட்டுத்தொகை நூல்கள் :

1.)     பதிற்றுப்பத்து ;

சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய இந்நூலில் முதற் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை. மன்னர்களின் போரும் வெற்றியும் வாரிவழங்கும் வள்ளல் தன்மையும் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடிய குமட்டூர்க் கண்ணனார் முருகனைப்போல் யானை மீதேறி வந்ததை ஓர் உவமையால் விரிதுரைக்கின்றார். “ சூருடை முழுமுதல் தடிந்த பேரிசை ; கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு..”  அஃதாவது, சூரபதுமனாதன் தன்மையை உடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும் புகழையும் மிகுந்த சினத்தினையும் வெற்றியினையும் கொண்ட முருகப்பெருமான் தனக்குரிய ஊர்தியாகிய யானையின் மீதேறி அதனைச் செலுத்தினது போல அரசன் வெற்றிக்களிப்பில் வலம் வந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

 கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் புகழ்ந்து பாடிய பரணர் “ கடவுள் நிலைய கல் ஓங்கு நெடுவரை ; வட திசை எல்லை இமயம் ஆக ..’ அஃதாவது கடவுள் நிலையை உடைய ஓங்கி உயர்ந்த பக்க மலைகளைக் கொண்ட இமயம் வட திசை எல்லையாகவும் தெற்கில் குமரி எல்லையாகவும் கொண்ட பெரும் நிலப்பரப்பை வெற்றி கொண்டவன் செங்குட்டுவன் என்று கூறினார் ;

தொல்தமிழர் நடுகல் நட்டுக் கடவுள் வழிபாடு செய்தமையைக் குறிப்பிட்டுள்ளார்.

பல யாகங்களையும் பெரிய அறச் செயல்களையும் செய்து முடித்தவன் சேரன் வாழியாதன். கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன். அத் தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினைத் தேவதானமாக்க் கொடுத்தவன் என்கிறார் கபிலர்.

மேற்குறித்துள்ள சான்றுகளால் தமிழர் , முருகன் வழிபாடு, நடுகல் வழிபாடு, திருமால் வழிபாடு ஆகியவற்றை வழிபட்டனர் என்பது தெளிவாகின்றது.

6.)கலித்தொகை:

இந்நூலில் காமனைக் குறித்து 8 பாடல்கள் ; காமனுக்கு வேனிற்காலத்து விழா எடுத்தல், விருந்து அயர்தல், மரக் கொடியை ஏற்றுதல், காமன் படை விடுதல், காமனுக்குக் கோயில் இருந்ததையும்  அறிமுடிகிறது.

பலராமன், கண்ணன், திருமால், சிவன், முருகன், ஆகிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

காமனை வழிபடுதல், தமிழர் வழிபாட்டு நெறியில் சிலப்பதிகாரத்திற்குச் சற்று முற்பட்ட நிலையாகும்.

………………………..தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக