ஞாயிறு, 11 மே, 2025

தமிழமுது -25 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.: கடல் தெய்வ வழிபாடு :

 

தமிழமுது -25 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.

கடல் தெய்வ வழிபாடு :

கடற்கரை பரதவர் முழுநிலா நாளன்று மீன் பிடிக்கச் செல்ல மாட்டார்கள். மீனும் இறைச்சியும் படைத்துக் கடல் தெய்வத்தை வணங்குவர்.

உவாநாள் வழிபாடு :

“சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்

மடல் தாழை மலர் மலைந்தும்

பிணர்ப் பெண்ணைப் பிழி மகிழ்ந்தும்

புந்தலை இரும்பரதவர்

பைந்தழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது

உவுவ மடிந்து உண்டு ஆடியும் “ கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை;  87 – 93.

சிவந்த தலை மயிரினையுடைய பெரிய பரதவர்கள், உவா நாளில் பரந்த ,கரிய, குளிர்ந்த கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை. அவர்கள் அந்நாளில் தொழிலில் தோன்றும் ஊக்கம் தவிர்ந்து காணப்படுவர். அவர்கள், பசுமையான தழையாடை உடுத்திய கரிய தம் மனைவியருடன் கூடியிருப்பர்.

 பரதவர், சினைகளை உடைய சுறா மீனின் கொம்பை நட்டு, அதில் வலிய தெய்வத்தை நிறுத்தி வழிபடுவர்.

 அவ்வழிபாட்டின் பொருட்டு, விழுதுகளைக் கொண்ட தாழையின் அடிப்பகுதியில் வளர்ந்துள்ள வெண்கூதாளியின் குளிர்ந்த பூக்களால் ஆகிய மாலையை அணிவர். மடலையுடைய தாழையின் மலரைச் சூடுவர் ; சருக்கரை உடைய பனைமரத்தினின்றும் எடுக்கப்பட்ட கள்ளை உண்பர். நெல்லால் ஆக்கப்படும் கள்ளினையும் உண்டு விளையாடுவர்.

(பரதவர், சுறா மீன்களால் தங்களுக்கு எவ்வகை இடையூறும் நேராமல் அத்தெய்வம் காக்கும் என நம்பினர்.)  (உவவு – உவாநாள், மதி நிறை நாள் ; காழ் – காம்பு.)  

……………….தொடரும்……………………………..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக