தமிழமுது -24 - கடவுள் கோட்பாடு
- தொல்தமிழர் வழிபாடு.
வெறியாட்டு :
மனிதர் மேல் தெய்வம் ஏறிவருவதாக நம்பியதன் வழிபாடு செய்வது
வெறியாட்டாகும். இது முருகனோடு தொடர்புடையது. வேலனின் வெறியாடலை சங்க இலக்கிய அகப்பாடல்களில்
காணலாம். வெறியாட்டுக் குறித்துத் தொல்காப்பியத்தில்…
“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்” – 1006. என்று இடம் பெற்றுள்ளது.
வெறியாடலின்
சிறப்பினை அறிந்த கொடிய வாயினை உடைய வேலன் ஆடிய காந்தளும்.
முருக வழிபாடு:
“வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
அன்னை அயரும் முருகுநின்
பொன்னேர் பசலைக்கு உதவா மாறே.”-நல்வெளியார், நற்றிணை, 47 : 9 – 11.
காதலால்
மெலியும் தலைவியைக் கண்ட தாய் இவள் நோயுற்றாள்
என்று கருதி, வெறியாட்டு நிகழ்த்துவாள்.
வெறிக்களம்
அமைத்து வேற்படையை நிறுத்தி ஆட்டுக்கிடாயை அறுத்துச் செய்யப்படும் முருக வழிபாடு ;
நின் பொன் போலும் பசலை நீங்க உதவாது.
(தலைவனால் மட்டுமே இந்நோய் நீங்கும் என்பதே கருத்தாம்)
இவளின்
துன்பத்திற்கு முருகனே காரணம் எனக் கருதி
“ அரிய அச்சத்தைச் செய்யும் வேலன், இடுக்கண் முருகனால் வந்த்தெனக் கூறினான். தான் கூறிய
அச்சொல்லின் கண்ணே கேட்போரை வளைத்துக்கொண்டு
ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க , கார்காலத்து மலராகிய குறிஞ்சியைச் சூடி, கடம்பணிந்த முருகனைச் செவ்விதாகத்
தன் மெய்யின்கண் நிறுத்தி விடுவான். அவ்வாறு வழிபட, மகளிர் தம்முள் தழுவிக் கைகோர்த்து
மன்றுகள் தோறும் நின்று குரையாடுவர்.” என்கிறது மதுரைக்காஞ்சி.
வெறியாடும்போது
ஆடு பலியிடுதல் மரபு. அதன் குருதியினைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவார்.
“மறிகுரல் அறுத்துத் தினைப் பிரப்பு
இரீஇ
செல் ஆற்றுக் கவலைப் பல்லியம்
கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து
ஆகா.” – பெருஞ்சாத்தன், குறுந்தொகை : 263. 4-5.
வெள்யாட்டுக் குட்டியின் கழுத்தை அறுத்து,
தினை அரிசி நிரம்பிய பிரம்பின் கூடையை வைத்து, வெறியாற்குச் செல்கின்ற ஆற்றின் நடுவில்
அமைந்த மணல் திட்டில், பல இசைக்கருவிகள் ஒலிக்க, வேலன் முதலியோரை ஆவேசித்துத் தோன்றுதல்….
இச்சடங்கு தலைவியின் காதல் நோய்க்கு மருந்தாகுமா
….ஆகாது.
களவின்கண் நிகழ்ந்த காதல் வீட்டிற்குத்
தெரியாது, தலைவன் பிரிவை ஆற்றாது தலைவி உண்ணாமல் உறங்காமல் நாளும் மெலிந்துவருவதைக்கண்ட தாய் இவளுக்கு ஏதோ
நோய் கண்ட்தாகக் கருதி முருகனை வழிபட்டுத் தன் மகளைத் தேற்ற நினைத்தாள், அதனால், சாமியாடும் வேலனை அழைத்து இச்வடங்கைச் செய்கிறாள் என்று அறியவும்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக