திங்கள், 7 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 192–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள். சர் ஐசக் நியூட்டன் – 1643 – 1727.

 

சான்றோர் வாய் (மைமொழி : 192–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

சர் ஐசக் நியூட்டன் – 1643 – 1727.

இவர் இங்கிலாந்து நாட்டவர் – இவர் கூறிய இயற்பியல் அறிவியல்  உண்மைகள் – தத்துவச் சிந்தனைகள் – அறிவியல் கண்டுபிடிப்புகள் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

”நான் கண்டு பிடித்தவையெல்லாம் என்முன்னோர்கள் தோளின் மீது ஏறிநின்று கண்டவையே..!” என்றார்.

கோப்பர் நிக்கஸ், கெப்லர், கலிலியோ முதலியோர்க்கு இருந்த சமய இடையூறுகள் இவருக்கு இல்லை. இவரின் அறிவியல் எழுச்சி சிந்தனையாளர்களை அனுபவ உலகிற்குத் தள்ளியது.

“எங்குமுள ஈர்ப்பு விசை இயக்கம் பற்றி இவர் தந்த விளக்கம் புதிய ஆய்வுகள் தோன்றவும் ; கண்டுபிடிப்புகள் பெருகவும் உதவியது. இதனால் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது ; நாகரிக வளர்ச்சியும் ஏற்படலாயின.

 

 

 

பிரான்சிஸ் பேகன் – 1561 – 1626.

அவலம் நிறைந்த வாழ்க்கை – அரசுப்பணி – பணி இழப்பு – பிறகு சில நூல்கள் எழுதினார் – கட்டுரை வடிவம் தோற்றுவித்தவர் இவரே.

”அறிவே ஆற்றல்” என்னும் கருத்திற்கு முதன்மை தந்தவர். அறிவியல் துணையோடு வாழ்க்கையில் எளிமையும் இன்பமும் அடைய வேண்டும் என்றார். உண்மைகள் இயற்கையில் பொதிந்து கிடக்கின்றன- மனத்தில் அல்ல.

 அனுபவத் துளிகளிலிருந்து அறிவியல் விதிகளை உருவாக்கும் அளவை முறைக்குத் தொகுப்பளவை என்று பெயர்.  பேகன் “தொகுப்பளவையின் தந்தை” (Inductive Logic)

 பகுப்பளவை,முறையே (Deductive Method)  அறிவியல் ஆய்வுக்குச் சிறந்தது என்றார். அரிஸ்டாட்டில் இக்கருத்திற்கு எதிரான தொகுப்பளைவையே சிறந்தது என்றார். அனுபவமும் சோதனையும் இல்லாத முறைகள் அறிவியல் ஆகா. மனத்தடைகள் (பற்று) மனிதனின் சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கின்றன.

மனத்தூய்மை சிந்தனைத் தெளிவைத் தரும். அரசியல், சமுகப் பொருளாதார ஆராய்ச்சி வளர்ச்சியில் இவரின் தொகுப்பளவை இன்றும் துணை புரிகிறது.

 What is Science ….?

…………………..தொடரும்…………………………….

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 191–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.அறிவியல் புரட்சி:

 


சான்றோர் வாய் (மைமொழி : 191–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.அறிவியல் புரட்சி:

 

 அறிவியல் புரட்சி:

அறிவியல் புரட்சி _-  முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன், ஈண்டு மேலும்  அறிவியல் வளர்ச்சி குறித்துச் சிலசெய்திகளை நினைவூட்டலாகக் கொள்ளவும்.

 தற்கால அறிவியல் வளர்ச்சியின் முன்னோடிகள் – கோப்பர் நிக்கஸ், கலிலியோ, கெப்லர், நியூட்டன் முதலியோரைக் குறிப்பிடலாம்.

 தாலமி வகுத்த புவிமைய பிரபஞ்சக் கோட்பாடு – பூமியை மையமாகக்கொண்டு பிரபஞ்சத்தின்  பிற கோள்கள் இயங்குகின்றன என்றார். 16ஆம் நூற்றாண்டில் கோப்பர் நிக்கஸ் தாலமியின் கருத்தை மறுத்தார்.

 

கோப்பர் நிக்கஸ்: - 1474 – 1543. போலந்து நாட்டைச் சேர்ந்தவர். தாய் நாட்டில் வானியல் ஆய்வுக்கூடம் அமைத்தார். சூரியனை மையமாகக் கொண்டு இப்பிரபஞ்சம் இயங்குகிறது என்றார். பிற கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்றார். இவர் எழுதிய நூலின் பெயர் “புரட்சிகள்’ என்பதாகும். இவருடைய கருத்து சமயக் கருத்திற்கு எதிரானதாக இருந்தது அதனால் இவரின் ஆய்வு முடிவுகள் இவர் இறந்தபின்தான் வெளியாகின.

கலிலியோ: - 1564 – 1643.

இத்தாலிய வானியல் விஞ்ஞானி. தனது ஆய்வுரையை உரையாடலாக அமைத்திருந்தார். “இரு முக்கியமான அமைப்புக் கொள்கைகள் பற்றிய உரையாடல்” என்பது அந்நூலின் பெயர். கோப்பர் நிக்கஸின் கருதுகோள்களை நிரூபித்தவர். நியூட்டன் பிறந்த நாளில் கலிலியோ இறந்தார். தொலைநோக்குக் கருவியால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்கினார். அதனால் , கலிலியோ சமயக் குர்றவாளியாகக் கருதப்பட்டார். சமய கூர்வாளுக்கு அஞ்சி அப்போதைக்குத் தன் கருத்தை மாற்றிக்கொண்டார்.

……………………………….தொடரும் …………………..

சனி, 5 ஏப்ரல், 2025

 

சான்றோர் வாய் (மைமொழி : 190–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

 

இலக்கியப் புரட்சி :

புது யுகத்தின்  முதல் குரல் இத்தாலியில்தான் ஒலித்தது. இங்கு ஒரு இலக்கியப் புரட்சியைத் தோற்றுவித்தவர்  “பொக்காசியோ” –கி.பி. 1313 – 1375. இவர் எழுதிய ’டெக்கமரான்’ கதைத்தொகுப்பு எழுச்சியை ஏற்படுத்தியது. மனவுணர்வுகள், உணர்ச்சிப் பிறழ்வுகள், இன்ப வேட்கை, சமய எதிர்ப்பு, உலகியல் வாழ்க்கையில் ஈடுபாடு ஆகியன மையக் கருத்துகள்.

கலைப் புரட்சி :

லியனார்டோ டாவின்சி – 1452 – 1519. இவர் அறிவுக்குப் பொருந்தாத கலைகளை வெறுத்தார். இயற்கைக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இவர் ஓவியங்கள் வர்ஜின் ஆஃப் தி ராக்ஸ், லாஸ்ட் சப்பர், மோனோலிசா இவை மூன்றும் சிறந்ததென்பர்.

ஆயிரம் ஆண்டுகளாக ஒரே திசையிலும் ஒரே பாதையிலும் ஓடிய சிந்தனையை மடை மாற்றம் செய்து புதிய பாதை காட்டிய பெருமை 16ஆம் நூற்றாண்டு அறிஞர்களையே சாரும். இது மனித வாழ்வின் நாகரிகத்தை மாற்றியது ; அறிவியல் வளர்ச்சிக்கு உதவியது.

 அறிவியல் புரட்சி:

……………………………….தொடரும் …………………..

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 189–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 189–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.

சமயக் காரிருள் அறிவுச் சூரியனின் கதிர்கள்பட்டு விலகியது. மக்களிடம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று மேலோங்கி சமயம்  பின்னுக்குத் தள்ளப்பட்டது. இலக்கிய மறுமலர்ச்சி ,  சமயச் சீர்திருத்தம், அரசியல் புரட்சி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றால் ஐரோப்பா கண்டம் முழுமையும் படர்ந்திருந்த அறியாமை மூடுபனி அகன்றது.

 

மக்கள் உலகியல் வாழ்வுக்கு முதன்மை தந்தனர். தொழில் புரட்சியும் – பொருளாதார உற்பத்திச் சாதனங்களும் பெருகின.

இடைக்காலம் (கி.பி. 5 – 15 ) இருண்ட காலம் என்றாலும் “புது யுகம்” என்ற கருவைச் சுமந்து வளர்த்த தாயாக இருந்தது புது யுகம் 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிறந்தது. சிறிதுசிறிதாக வளர்ந்து 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. பல நூறுஆண்டுகள் தடைப்பட்டுக் கிடந்த சிந்தனை ஓட்டம் அனையை உடைத்தெரிந்து ஐரோப்பிய நாடுகளின் மூலைமுடுக்களிலெல்லாம் பாய்ந்தோடியது.

மறுமலர்ச்சி:

கி.பி. 14 இல் கிரேக்கத்திலும் ரோமானிய  இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஐரோப்பாவில் பல துறைகளிலும் மாற்றம் . மக்கள் புது வரவும் உறவும் கொண்டனர். பழைய இலக்கியங்கள்  புதிய பார்வையில் பூத்தன. சிந்தனையில் புரட்சி, கலைகளில் புது வடிவம், புதிய கண்டுபிடிப்புகள்                     ஏற்பட்டன. சமுதாய அமைப்புத் தலைகீழாய் மாறியது..

புதுயுகத்தில் மனித முயற்சி மதிக்கப்பட்டது . சமயப் பற்றில் ஆற்றல் இழந்த மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்தான். தான் ஈட்டிய வெற்றிகளைக் கண்டு மகிழ்ந்தான்.

இலக்கியப் புரட்சி :

……………………………….தொடரும் …………………..

வியாழன், 3 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 188–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் தாமஸ் அக்கினாஸ் – Saint Thomas Acquinas – கி.பி. 1225 – 1274.

 

சான்றோர் வாய் (மைமொழி : 188–அறிவியல் சிந்தனைகள்: புனிதர் தாமஸ் அக்கினாஸ் – Saint Thomas Acquinas – கி.பி. 1225 – 1274.

இடைக்காலச் சிந்தனையில் தேக்கம் நிலவியது . கிரேக்கத் தத்துவங்களைப் புதிய சொற்களில் வடித்தனர் ;  கோட்பாடுகளைத்  திரித்தும் வளைத்தும்  கிறித்துவச் சமயத்திற்குப் பயன்படுத்தினர். மடாலயங்கள் சுதந்திரமான சிந்தனைக்குத் தடுப்புச் சுவர்களாயின.


 மடாலயக் கல்வி முறை வளர்ந்தது 10ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பாரிசு பல்கலைக் கழங்களில் தத்துவ விளக்கங்கள் ‘புலமைத்துவம்’ (Scholasticism)  எனப் பெயர் பெற்றது.  Scholasticism was a medieval European philosophical movement or methodology that was the predominant education in Europe from about 1100 to 1700.[1] It is known for employing logically precise analyses and reconciling classical philosophy and Catholic Christianity.[

 

 இதில் மதச் சார்புடைய தத்துவ வரையறைக்குட்பட்டுச் சிந்திக்க வேண்டியதாயிற்று. இச்சிந்தனை முறைகூட சிலவேளைகளில் சமயத் தலைமை அச்சுறுத்தியது. புலமைக் கோட்பாளர்கள் புரியாத மொழியில் பேசி,எழுதி வருவதைப் பெருமையாகக் கருதினர்.

 கல்விப் புரட்சி :

12ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்விப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சியின் பலனாக அரிஸ்டாட்டிலின் அளவையியல் தத்துவம்  வளரலாயிற்று. இது கிறித்துவத்திற்கு எதிரானபோதும் அதனைப் போற்றினர். அளவையியல் கல்வியும் பயிற்சியும்  சிந்தனையைச் செழிக்கச் செய்தன. அரிசுடாட்டில் தத்துவத்திற்கு வலிவும் பொலிவும் தந்தவர் அக்கினாஸ்.

சமயமும் தத்துவமும்  இருவேறு களப்பரப்புடையவை அவற்றை இயைந்து போகச் செய்வதோ ஒருங்கிணைப்பதோ இயலாத செயல் என்றும் கூறினார்.

அக்கினாஸ் :

அக்கினாஸ் 25 நூல்கள் எழுதியுள்ளார். கிறித்துவ சமயத்தை அதன் வீழ்ச்சியினின்று காப்பாற்றியவர். இத்தாலியில் பிறந்தவர். கிறித்துவ  சமயத்தின்  தீவிர இயக்க மான   “தொமினிகண்” இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு துறவு வாழ்க்கை மேற்கொண்டார். கடவுள் முதல் மனிதன் வரை பருப்பொருள் முதல் நுண்பொருள் வரை அனைத்தையும் ஆராய்ந்துள்ளார்.

 இறையியல் சுருக்கம்  ”சம்மாவிரிவுரை’ நூலில் (Summa Theologica) கடவுள் உண்டு என்பதற்கு ஐந்து நிரூபணங்களைத் தந்துள்ளார். கடவுள் இயக்கப்படாத இயக்கி, தனக்குத்தானே இயக்கம் உடையவராகவும் பிறவற்றையெல்லாம்  இயக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்கிறார்.” என்றார்.

இறைமை வாழ்வு:

 மானிட வாழ்வின் முடிந்த பயன் இறைவனுடன் ஒன்றி வாழ்வதே..! இறைவன் அருளால்தான் இந்நிலை கிட்டும் . இறைவனை அறியும் அறிவே தலையாய அறிவு ; ஆன்மா உலகியல் நிலைக்கு அப்பாற்பட்டது. உடல் ஆசைகள் உலகியல் சார்ந்தவை ; ஆன்மாவின் ஆசையும் வேட்கையும் உலகியல் கடந்த நிலையிலேதான் நிறைவுறும்.

இவரின் தத்துவக் கருத்துகள் அரிஸ்டாட்டிலின் கருத்துகளை அடியொற்றியவை.

…………………………….தொடரும்………………………

புதன், 2 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 187–அறிவியல் சிந்தனைகள் :ரோசலின் – Roscelin – கி,பி. 1050 – 1122.

 

சான்றோர் வாய் (மைமொழி : 187–அறிவியல் சிந்தனைகள் :ரோசலின் – Roscelin – கி,பி. 1050 – 1122.

 

சாக்ரடீசு, பிளேட்டோ இருவரும் – பொதுமை என்பது பரு உலக எல்லைக்கப்பால் உள்ள நுண்பொருள் என்றனர்.

 ரோசலின் – பொதுமை என்ற ஒன்றில்லை என்றார். கிறித்துவச் சமயத்திற்கு  எதிரான கருத்துகளை வெளியிட சமயப் பேரவையால் அச்சுறுத்தப்பட்டார்.

 

ஆன்செல்ம்- Anselm – கி.பி. 1035 – 1109.

 

ரோசலின் கருத்தை வன்மையாக மறுத்து, இறைக் கோட்பாட்டை உயர்த்தியவர். ‘தனிப் பொருள்களுக்கு அப்பால் ‘ – ’பொதுமை’  உண்டென்றும் அப்பொதுமையின் கூறே தனிப்பொருள்கள் என்றரர். பொதுத் தன்மையும் தனித்தன்மையும் சேர்ந்தால்தான் ஒரு பொருள் இருப்புநிலை பெறுகிறது. பொதுமையும் தனிமையும் கலவாத பொருள் இல்லை ; அத்தகைய பொருளைக் கற்பனையிலும் உருவாக்க இயலாது” என்றார்.

 

கடவுள் உண்டு – நம்பிக்கையும் பகுத்தறிவும் முரண்பாடு உடையவையல்ல – நம்பிக்கையே அறிவுக்கு முதற்படி. ஒன்றை நம்ப வேண்டும்  என்பதால் அதனை ஆரயக் கூடாது என்பதல்ல, ஆராய்ச்சி அறிவு நம்பிக்கையை உறுதி செய்வதாக அமைய வேண்டும் “

“கடவுள் உண்டு என்பதை இவர்

 உள்ளியல் வாதம் விளக்கும்.”

ஒரு பொருளின் இலக்கணத்திலிருந்து அப்பொருளின் பண்புகளை அறிவது உள்ளியல் வாதத்தின் அடிப்படையாகும்.

…………….……தொடரும்…………………………

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 186–அறிவியல் சிந்தனைகள் :இடைக்காலம் – சமயச் செல்வாக்கு,

 

சான்றோர் வாய் (மைமொழி : 186–அறிவியல் சிந்தனைகள் :இடைக்காலம் – சமயச் செல்வாக்கு,

 இடைக்காலம் சமயச் செல்வாக்கு உயர்ந்த நிலையில்– சிந்தனையாளர்கள் சமயம் சார்ந்திருந்தனர் -  சமய நிறுவனங்கள் செல்வச் செழிப்பில் மிதந்தன  - சமயக் குருமார்களின் சுகபோக வாழ்வு – மக்களை அரசும் சமயமும் அடிமைப்படுத்தின,சுரண்டின – அரசு சமயத்திற்கு அடிபணிந்தது -  இடைக்காலத் தத்துவம் கிறித்துவ சமயத்திற்குக் குற்றேவல் செய்துகொண்டிருந்தது –

அரசு + சமயம் = இரு சம்மட்டிகள் – மக்கள் அடிபட்டு அறிவையும் பொருளையும் இழந்தனர்.

 தத்துவக் கல்வி – சமயக் கல்வியாக மாறியது – சமுகத்தில் மேல்மட்ட மக்கள் மட்டும் கல்வி பெற்றனர் – மக்கள் அறியாமையால் கடவுளுக்கு அஞ்சி அடிமையாகக் கிடந்தனர் – மக்கள் பலவழிகளில் சுரண்டப்பட்டனர்.

அரசுக்கும் சமயத்திற்கும் கடும் போட்டி  - மன்னன் பெரியவனா..? போப்பாண்டவர் பெரியவரா..? – பூசல் வலுத்தது – 10ஆம் நூற்றாண்டில் பூசல் உச்சக் கட்டத்தை அடைந்தது.

 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ரோஸலின். ஆன்செலம் முதலிய சமயச் சார்புடைய சிந்தனையாளர்கள் தோன்றினர். சமயம் தழைக்கச் சிந்தித்தனர் – பண்டைய கிரேக்கத் தத்துவங்களுக்குச் சமயச் சாயம் பூசப்பட்டது.

ரோசலின் – Roscelin – கி,பி. 1050 – 1122. ……தொடரும்…