திங்கள், 5 டிசம்பர், 2016

தலைவியும் தோழியும்………!

தலைவியும் தோழியும்………!
” யாமே பிரிவின்று இயைந்த துவரா நட்பின்
 இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே” –
 கபிலர், அகநானூறு , 12
யானும் தலைவியும் பிரிவின்றி, மனம் ஒன்றிய வெறுப்பில்லாத நட்பினால் இரு தலைகளை உடைய பறவையின் உடலில் இருக்கும் ஓர் உயிர் போல் ஆவேம்.
நெஞ்சம் நெகிழ்ந்து…
தமிழ் மக்களின் அன்புக்குரிய தலைவியாக விளங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர், இன்று நம்மிடையே இல்லை… துயரத்தில் தோய்ந்து, மக்களோடு என் மனமும் கரைகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின்  இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அந்த இழப்பை நம்மாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை….!
 நட்புக்கு இலக்கணமாக, உயிருக்கு உயிராக உள்ளம் ஒன்றிய அன்பினால் பல ஆண்டுக் காலம் உடனுறைந்த திருமதி சசிகலா அவர்களை முதல்வரின் உடலருகே காணும் பொழுது…  !
உள்ளம் உருகி… உடல் வதங்கி.. கண்ணீர்க் கடலில் மூழ்கித் தவிக்கும் திருமதி சசிகலாவின் அர்ப்பணிப்பு நட்புணர்வை என்னென்று சொல்வேன்…?
 ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாண்புமிகு முதல்வரின் நிழலாக இரவும் பகலும் ஒரு தாயுள்ளத்தோடு துணையாக இருந்து… முதல்வருக்குப் பணிவிடை செய்வதைத்தவிர வேறு வேலை எதுவுமின்றித் தன்னலம் கருதாது, தற்சுகம் பேணாது முதல்வருக்குப் பணி செய்வதற்கே பிறப்பு எடுத்தது போல  முதல்வர் அருகில் இருந்து.. அவர், உண்ணவும் உறங்கவும் உடல் நலம் பேணவும் தன் வாழ்க்கயை அர்ப்பணித்தவர் திருமதி சசிகலா.
மருத்துவ மனையில் 75 நாட்கள் தன்னந்தனியாக நின்று போராடி முதல்வரைக் காப்பாற்ற என்ன பாடுபட்டாரோ..? இஃது என்னமோ பதவி, பணம், பலன்கருதி செய்யப்பட்டதாக நினைக்கத் தோன்றவில்லை ; அத்தகைய பலன்களைப் பெறுவதற்காக  எத்தகைய சூழ்ச்சியையும் , வஞ்சகத்தையும், கொடுமையும் அவர் இதுநாள்வரை சிந்தித்தார் என்றோ, செயல்பட்டார் என்றோ அறியமுடியவில்லையே..!
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்குத் தன் தூய்மையான அன்பு ஒன்றினாலே இறுதிவரை உறுதியுடன் துணை நின்றார் திருமதி சசிகலா.
“ கோட்டுப் பூப்போல மலர்ந்து பின் கூம்பாது
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி… - நாலடியார்.
 மலர்ந்து பின் கூம்பாது மலர்ந்தபடியே இருக்கும் மரத்தில் மலரும் மலரைப்போல, இறுதி வரையிலும் விருப்பத்துடன் தொடருவதே நட்பின் சிறப்பாகும்.
 மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
திருமதி சசிகலா அவர்களுக்கு ஆறுதலும் அமைதியும்
காலம் தருவதாகுக.

 இந்நாள் போன்று இனியொரு நாள் வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக