செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…79.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…79.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

சான்றோர் இயல்பு.

”தம்குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறும்

வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் – திங்கள்

கறை இருளை நீக்கக் கருதாது உலகில்

நிறை இருளை நீக்குமேல் நின்று”-

 

 வெள்ளி நிலா தன்னிடத்தில் விளங்கும் களங்கமாகிய இருளை நீக்குதற்கு நினையாமல், உலகில் நிறைந்துள்ள இருளை அகற்றி உயிர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதுபோல, நற்குணங்கள் நிறைந்த உயர்ந்தோர் தமக்குத் துன்பம் தரும்  செயல்களை நீக்க நினையாமல் பிறர்க்கும் வரும் துன்பங்களைக் கண்டு மனம் உருகி  அவர்தம் துன்பங்களைத் தீர்த்து வைப்பர்.

 

”பிறர் நோயும் தம் நோய் போல்போற்றி அறனறிதல்

சான்றவர்க் கெல்லாம் கடன்….”- நல்லந்துவனார், கலித்தொகை: 139.

 

பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் போற்றி ஒழுகுதல் சான்றோர்க்கெல்லாம்  கடமையாகும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக