புதன், 21 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…87.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…87.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

நற்குணம் இல்லாதவர்..!

”உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்

கொண்டு புகல்வது அவர் குற்றமே – வண்டுமலர்ச்

சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ

காக்கை விரும்பும் கனி.”

 

தேன் உண்ணும் வண்டுகள் அழகிய மலர்ச்சோலையுள் புகுந்து  சுவையான தேன் உண்டு மகிழும் ; ஆனால் சோலையில்  நல்ல சுவை மிகுந்த கனிகள் இருந்தாலும் காக்கை வேப்பம் பழத்தையே விரும்பி உண்ணும். அதுபோல,  ஒருவரிடம் விரும்பத்தகுந்த நற்குணங்கள்  இருப்பினும் அவற்றைப் போற்றி உரைக்கும் கல்வியறிவு இல்லாத கீழ்மக்கள் அவரிடம் தீய குணம் இருப்பதாகப் பலரிடம் சென்று இட்டுக்கட்டிப் பேசுவர்.  

”பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்

நன்றுஅறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்.” –சமண முனிவர்கள், நாலடியார் : 26:7.

நன்மை இன்னதென்று அறியாத மூடர்களுக்கு அறநெறிகளைப்பற்றி உரைப்பது, பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டியில் மாம்பழச் சாற்றை ஊற்றியது போல் ஆகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக