புதன், 14 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…80.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…80.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

பிறத்தலும் இறத்தலும் இயற்கையே.

“வருந்தும் உயிர் ஒன்பால் வாயில் உடம்பில்

பொருந்துதல் தானே புதுமை – திருந்திழாய்

சீதநீர் பொள்ளற்  சிறுகுடத்து நில்லாது

வீதலோ நிற்றல் வியப்பு.”

 

பெண்ணே…! ஓட்டைக் குடத்தில் நிரப்பிய நீர்  நில்லாமல் ஒழுகிப் போதலே இயல்பு ;  அப்படி நீர் ஒழுகாமல் நின்றால் தானே வியப்பு. அதுபோல,  ஒன்பது ஓட்டைகளை உடைய உடம்பில்  உயிர் தங்காது  நீங்குதல் இயல்பு ;  உடம்பில் உயிர் நீங்காது நிற்குமோ ? அப்படி நீங்காது நின்றால்தானே வியப்பு.

“காடு முன்னினரே நாடு கொண்டோரும்

நினக்கும் வருதல் வைகல் அற்றே.” – காவிட்டனார், புறநானூறு : 359.

 

வெல்லமுடியாத பெரிய நாடுகளை வென்ற முடிமன்னர்களும் முடிவில் சுடுகாட்டுத் தீயில் சென்று அடைந்தனரே, அவ்வாறே உனக்கும் ஒருநாள் காடு அடையும் நாள் வரும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக