திங்கள், 26 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…91.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…91.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

 

”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

     ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

     போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

 வாகாரும் குறவருடைய வள்ளி பங்கன்

     மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.”   

 

காலை எழுந்தவுடன் படிப்பு என்பதை நினைவில் கொண்டு நாள்தோறும் படிக்காமல் இருக்க வேண்டாம்.

எவரிடத்தும் பிறரைப்பற்றிக் குறைகூறிப் பழித்துப் பேச வேண்டாம்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை மறக்காதே..! பெற்ற தாயைத் தெய்வமாக மதித்துப் போற்றாமல் இருக்க வேண்டாம்.

வஞ்சக எண்ணம் கொண்ட கீழ்மக்களுடன் நட்புக் கொள்ள வேண்டாம்.

கயவர்கள் கூடும் இடங்கள்  போகத் தகாத இடங்களாகும் அங்கெல்லாம்  போக வேண்டாம்.

 பழகிய ஒருவரை முன்னேவிட்டுப் பின்னே பேசும் இழி செயலைச் செய்ய வேண்டாம்.

 நெஞ்சே..!  தோள்வலிமை மிக்க குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியின் கணவனாகிய மயிலேறும் முருகப் பெருமானை வணங்குவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக