சனி, 24 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 34 - 35

கலித்தொகை – அரிய செய்தி – 34 - 35
பெண்ணிற்கு அழகாவன
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூவழிச் சிறுகி
கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு
சோழன் நல்லுருத்திரன். கலித்.108 :  1 - 4

ஏடீ !  அல்குல்- தோள்- கண் என மூன்றிடமும் பெருத்து – நெற்றி- அடி -இடை என மூன்றிடமும் சிறுத்து – மன்மதனும் தனக்குத் தொழில் இல்லை எனக் கவலையால் தன் படைக்கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு வருபவளே ….
கலித்தொகை – அரிய செய்தி – 35

இருமணம்
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே
சோழன் நல்லுருத்திரன். கலித்.114 :  19 – 21
விரிந்த திரை சூழ்ந்த கடலை ஆடையாக உடைய உலகத்தைப் பெற்றாலும்  - அற நெறியில் செல்லும் ஆயமகளிர்க்கு இருமணம் என்பது  குடிப்பிறப்பிற்கு இயல்பன்று.
( சிறந்த குடியில் பிறந்த மகளிர் விரும்பியவனையன்றி வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளார் என்பதாம். ) இப்பாடலில் – திருமணத்தின்போது வீட்டில் புதுமண் பரப்பி – செம்மண் பூசி அழகுபடுத்துதலும் – பெண் எருமையின் கொம்பை வீட்டினுள் நட்டு வழிபட்டமையும்  சுட்டப்படுகின்றன.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக