புதன், 22 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -59


மெய்ப்பொருள் காண்பது அறிவு -59

இசை

தமிழர்தம் தொன்மையான கலைகளுள் இசை சிறப்பிடம் பெறுகிற்து. தொல்காப்பியம் தொடங்கிப் பல இலக்கியங்களிலும் இசை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

“அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணர் …” –மலைபடுகடாம்.

 யாழ் நூலில் கூறியுள்ள இலக்கண மரபுக்கேற்ப, இசைப்பதற்கு ஏற்றவகையில் பேரியாழினை ஆயத்தம் செய்து, இசையை எக்காலத்தும் கேட்டு இன்புறும் செல்வச் சிறப்புடைய அரசர்களின் அவைக்களத்தில், அவர்தம் செவி குளிர இசைக்கும் பல்துறை அறிவுசான்ற பாணர்கள்.

“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பி யாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்” ---புறநானூறு.

போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர், மனையைத் தூய்மை செய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப் பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு.

“ சிற்பம், ஓவியம், நடனம் முதலிய மூன்றும் மற்ற கலைகளுக்கு முந்தியவை. இசை பொருளற்ற குரல் ஒலியாகவும் கருவி ஒலியாகவும் நடனத்துக்குப் பின்னணியாக மட்டுமே இருந்தது,” –நா. வானமாமலை.

” இசை நினைவாற்றலை வலுப்படுத்தும் என்பது அறிவியல் கண்ட உண்மை.” – Nat Geo.

அந்தக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமியர்  இசையோடு வாய்பாடு ஒப்புவித்தல்  நிகழ்த்தியதை ஒப்பு நோக்குக. 23/8/.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக