வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -68

தொடர்ச்சி…
மெய்ப்பொருள் காண்பது அறிவு -68
சோதிடம் உண்மையா..?
சோதிடம் எண்ணத்தில் பிறந்து, எழுத்தாணியிலும் எழுதுகோலிலும் வளர்ந்து, இன்று கணினி மயமாகிவிட்டது. சோதிடம் செல்வந்தர்களின் செல்லப்பிள்ளை. இந்தச் செல்லப்பிள்ளையின் சொல்லை யாரும் தட்டிக் கழிப்பதில்லை. நாளும் கோளும் இவர்களுக்காகவே நகர்ந்துகொண்டு இருக்கின்றன போலும். ‘நாளும் கோளும் நலிந்தவர்க்கு இல்லை,’ நாள் என் செய்யும் கோள் என் செய்யும்- நாளும் உழைத்தால்தான் உணவு என்றால் சகுனம் என் செய்யும்..?
உழைப்பின் மேன்மையாலே பல நாடுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. உழைக்க நேரமில்லை என்று வருந்தும் மக்களிடையே இன்றும் பலர் உளர்.உண்டு, உறங்கி, உற்றார், கெட்டார், உதவாக்கரைகளின் கதைகளைப் பேசிக் காலத்தை வீணே கழிப்பது போதாதென்று இராகு காலம், எமகண்டம், சூலம், குளிகை, அமாவாசை, பாட்டிமுகம் என்று காலத்தை விரயம் செய்கிறார்கள். இன்னும் சிலர் அட்டமி, நவமி என்று சில நாட்களையே விழுங்கி விடுகின்றனர்.
அருள் வாக்கு
சோதிடத்திற்காவது கூட்டல், கழித்தல் தெரிந்திருக்க வேண்டும். அருள்வாக்கிற்கு அதுவும் தேவையில்லை; ஞானப்பார்வை ஒன்றே போதும். அருள்வாக்கின் பெருமை அதன் பொருளைப் புரிந்து கொள்பவர் மனத்தைப் பொறுத்தது. சோதிடத்திற்குச் ‘சொல் சாதுரியம்’ அடிப்படை ; அருள்வாக்கிற்கு ‘அற்புதங்கள்’ அவசியம். வெறுங்கையில் விபூதி கொட்டும் ; சோறு கொட்டாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ‘சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.’ –இரெ. குமரன். …..தொடரும்…. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக