திங்கள், 23 ஜனவரி, 2017

ஏன் இந்த தடுமாற்றம்…!

ஏன் இந்த தடுமாற்றம்…!
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைத்தெறிந்த முதல்வர் அவர்கள், இது  ”நிரந்தரச் சட்டம் “ என்று தன் வாயால்
மகிழ்வோடு கூறவேண்டும் என்பதை எப்படி மறந்தார்… ஏன்மறைத்தார்..?
போராளிகளை அடித்துத் துரத்திவிட்டுப் போராட்டப் பொறுப்பாளர்கள் வாயால் அறிவிக்கச் செய்தது… உண்மையில் புரியவில்லை.
ஐந்து மணிக்குக் கூடிய சட்டப் பேரவையில் ஆறு மணிக்கெல்லாம்  ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை தலைமைச் செயலகத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்த அன்றே தொடங்கி விட்டதல்லவா..?
 அவசரச் சட்டம் பிறப்பித்த அன்றே சொன்னீர்கள் – “இது நிரந்ததரச் சட்டம் “  என்று, போராளிகள்,  ஏதேனும் தடை வந்துவிடுமோ என்று அஞ்சியே தங்கள் அறிவிப்பை ஏற்க மறுத்தனர். அவசரமாக தில்லி பயணம், அவசரமாக ஒரு சட்டம், அவசரமாக சல்லிக்கட்டு அறிவிப்பு, அவசரமாக அலங்காநல்லூர் பயணம்… என்ன நடந்தது….? இப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் தன்னிச்சையாகவே முடிவெடுத்தீர்களா..?
காலை நான்கு மணிக்குச் சென்னையில்  போர்க்களத்தில் புகுந்தது காவல்துறை, விழிக்கக் கூடாதவர்கள் முகத்தில் விழித்து… அலறல் … அரற்றல், தள்ளுமுள்ளு, அடி, உதை போராளிகளைப் பூனைகள் கடித்துக் குதறின.
ஏழு நாட்கள் பொறுமை காத்த நீங்கள் பன்னிரண்டு மணி நேரம் பொறுத்திருக்கக் கூடாதா..? இன்று மாலை ஆறுமணிக்கு நிரந்தரச் சட்ட  அறிவிப்பை நீங்கள் நேரில்…. வேண்டாம் …அரசு உயர் அதிகாரிகள், போராட்டக் குழுவினர், சட்ட வல்லுநர்கள் ஆகியோரைக்கொண்டு போர்க்களத்தில் அறிவிக்கச் செய்திருக்கலாமே..? இப்படி அறிவுரை கூற, இடித்துரைக்கும் அமைச்சர் சுற்றம் இல்லையா…  அறிவிற் சிறந்த அதிகாரிகள் இல்லையா…?  போராளிகளை அடித்து விரட்ட, காவல் துறைக்கு ஆணையிட்டது யார்..?
ஒரு பகல் பொழுது பொறுமை யுடன் இருந்து  உலகத் தமிழர்களும்  உண்ணாமல் உறங்காமல் உயிரோடு போராடி  வெற்றி காண விழைந்த போராளிகளும் வாய் நிறைய வாழ்த்துச் செய்திகளை வான் முட்ட ஒலிக்கக் காத்துக்கிடந்தனரே…!
 அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு அவலம் நிறைந்த செஞ்சில்  அடித்து , அழுது புரண்டு அந்நியப் படையினர் விரட்டுவதாக எண்ணி, கண்டவர் கண்களும் குளமாக… கடலாக
என்ன கொடுமை இது..!
நாளைய பொழுதாவது நல்ல பொழுதாக விடியட்டும்.
முதல்வர் அவர்களே உங்கள் பதற்றம் புரிகிறது  ;  உங்கள் சுற்றம்  சரியில்லை போலும்.
“ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.” ---குறள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக