சனி, 31 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :24.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

 

சான்றோர் வாய் (மை) மொழி :24.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

முருகன் வழிபாடு குறித்து நக்கீரர்…..

“ ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்

கோடுவாய் வைத்து கொடுமணி இயக்கி

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே…” – திருமுருகாற்றுப்படை : 245 – 249.

                        வெறியாட்டுக் களம் ஆரவாரிக்கும்படி பாடி ஊதுகொம்புகள் பலவற்றையும் சேர ஊதி, மணியை ஒலித்து, முருகப்பெருமானுடைய யானையை வாழ்த்தி, குறை வேண்டினார் தாம் வேண்டியவற்றைப் பெற்றார் போன்று நின்று வழிபாடு செய்ய , முருகப்பெருமான் அவ்விடங்களில் தங்குதலும் உரியன்.( பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலும் மயில் என்று பொருள் கூறுவர் ; பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே  பெயர் என்பாரும் உளர்.)

                தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள தமிழர்தம் கடவுள் வழிபாடு, பின்னாளில் புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. தமிழர் புராண இதிகாச பொய்யுரைகளைப் புறந்தள்ளி, நக்கீரர் கூறியவாறு முருகனை வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு  பெறுலாம் என்பதைக் கருத்தில் கொண்டு முருகனை வழிபடவும்.

(சிலம்புதல் – ஒலித்தல் ; கொடுமணி – வளைவு பொருந்திய மணி ; வாய் வைத்து – ஊதி.)

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :22.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

 

சான்றோர் வாய் (மை) மொழி :22.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

முருகன் எழுந்தருளும் இடங்களாக நக்கீரர்….

“சிறுதினை மலரொடு விளைஇ மறி அறுத்து

வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ

ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்

ஆவலர் ஏத்த மேவரு நிலையினும்

வேலவன் தைஇய வெறி அயர் களனும்

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்

யாறும் குளனும் வேறுபல் வைப்பும்

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்…” –திருமுருகாற்றுப்படை : 218 – 226.

         குன்றுதொறும் ஆடற்கண் நிற்றலேயன்றிச் சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியறுத்துச் சேவற்கொடியை உயர்த்தி , அவ்விடத்தே அந்த இறைப்பொருள் நிற்பதாக நினைத்து நிறுத்தும் ஊர்கள்தோறும் எடுக்கின்ற தலைமை பொருந்திய விழாவிடத்தும் முருகப்பெருமான் எழுந்தருளியிருப்பான்.

        தன்பால் அன்புடையோர் ஏத்துதலால் மனம் பொருந்தி அவ்விடத்தும் இருப்பான் ; வேலன் இழைத்த வெறியாடு களத்திலும் இருப்பான்;  காட்டிலும் சோலையிலும் அழகுபெற்ற ஆற்றிடைக் குறையிலும் ஆற்றிலும் குளத்திலும் முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறுபல ஊர்களிலும் நாற்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் புதிதாக மலர்ந்துள்ள கடம்ப மரத்திலும் ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரத்திலும் ஊரம்பலங்களிலும் அருட்குறியாக நடப்பட்ட தறிகளிலும் முருகன் எழுந்தருளியிருப்பான்.

(கல்தறி – இறைவன் அருள் குறித்து நடப்பட்ட கல் வழிபாடு ; வாரணம் – கோழி ; துருத்தி – ஆற்றிடைக்குறை ; வைப்பு – ஊர்;  மறி – ஆட்டுக்குட்டி )

 

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :21.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

 

சான்றோர் வாய் (மை) மொழி :21.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

அழகன் முருகனின் தோற்றப் பொலிவை நக்கீரர்…..

“மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்

கச்சினன் கழனினன் செச்சைக் கண்ணியன்

குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்

தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம்

கொடியன் நெடியன் தொடியணி தோளன்

நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு

குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்

மருங்கில் கட்டிய நிலனேர்பு துகிலினன்

முழவு உழற் தடக்கையின் இயல ஏந்தி

மெம்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே…” திருமுருகாற்றுப்படை, 205 – 217.

       முருகன் சிவந்த மேனியன் ; சிவந்த ஆடையை உடையவன் ;அசோகினது தளிர் அணிந்தவன் ;  வீரக்கழலைத் தரித்தவன் ; வெட்சி மாலையைச் சூடியவன் ; புல்லாங்குழலை இசைப்பவன் ; பெரிய கொம்பை ஊதுபவன் ; வேறுபல இசைக் கருவிகளையும் இசைப்பவன்

;ஆட்டுக்கிடாவை வாகனமாக உடையவன் ; மயிலை ஊர்தியாகக் கொண்டவன் ; குற்றமற்ற சேவல் கொடியை உயர்த்தியவன் ; நெடிய உருவம் படைத்தவன் ;  தொடி எனும் அணியைத் தோளில் அணிந்தவன் ; இடையில் நறிய மென்மை மிக்கதாகிய ஆடையை நிலத்தளவும் புரளும் வண்ணம் தரித்தவன் ;  முழவை ஒத்த பெரிய கைகளால் மான்பிணை போலும் பல மகளிரைத் தழுவிக்கொண்டு

அவர்க்கு முதற்கை கொடுத்து மலைகள் தோறும் சென்று விளையாடுதல் முருகக் கடவுளின் நிலைத்த குணமாகும்.

(தகர் – ஆட்டுக்கிடா ; குல்லை – கஞ்சாங்குல்லை ; வாலிணர் – வெள்ளிய பூங்கொத்து ; செய்யன் – சிவந்த மேனியன்.)

 

புதன், 28 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :21.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

 

சான்றோர் வாய் (மை) மொழி :21.நக்கீரர்-முத்தமிழ் முருகன்

                             தமிழ்நாட்டில் முத்தமிழ் முருகன் வி ழா மிகச்சிறப்பாக நடைபெற்றதாகக் கூறிக்களிக்கும் மக்களே…நீங்கள் கொண்டாடியது முருகனையா அல்லது சுப்பிரமணியனையா … தண்டாயுதபாணியையா ..?

தொல்தமிழ் மக்கள்  குன்றுதொறும் குடியிருக்கும் முருகனை  வழிபட்ட முறையினை நக்கீரர்….

“பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்

அம்பொதி புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்

கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்

நீடமை விளைந்த தேக்கள் தேறல்

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து

தொண்டகச் சிறுபறைக் குரவை அயர…” திருமுருகாற்றுப் படை: 190 – 197.

                 முருகனுக்குப் பூசை செய்யும் வேலன், பச்சிலைக் கொடியால் நல்ல மணமுடைய சாதிக்காயை இடையிடையே சேர்த்து அதனோடு புட்டிலைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் வெண்டாளிப் பூவையும் சேர்த்துக் கட்டிய  தலைமாலையை உடையவனாய் நிற்க, நல்ல மணங்கமழும் சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடையவரும் கொடிய தொழிலைச் செய்பவருமான குறவர்கள் நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவை, மலையிடத்துள்ள சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, தங்கள் குறிஞ்சி நிலத்துக்குரிய தொண்டகப் பறையை அடித்து, அவ்வோசைக்கேற்பக் குரவைக் கூத்தாட முருகக் கடவுள் எழுந்தருளுகின்றான்.

(நறைக்காய் – சாதிக்காய் ; குளவி – காட்டுமல்லிகை; புட்டில் (போன்ற) – தக்கோலக்காய் ; கேழ் – நிறம்.)

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :20. பரிமேலழகர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :20. பரிமேலழகர்.

“கொலையின் கொடியாரை   வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களை கட்  ட தனொடு நேர். 550.

இக் குறட்பாவிற்கு உரை வகுத்த பரிமேலகழகர், ’கொடியவர்’ குறித்து விளக்குவதாவது…”கொடியவர் என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர்,ஆறலைப்படார், சூறை கொள்வார், பிறன் இல் விழைவார் என்றிவர் முதலாயினரை ; இவரை வடநூலார் ‘ஆததாயிகள்’ என்ப. என்றவாறு பரிமேலழகர் கொடியவர்கள் பட்டியலை வடநூலார் வழிநின்று கூறுவதேன்?  திருக்குறளுக்கு வடவர் கருத்துகளை ஒப்பிட்டு உரை வகுப்பது அவரின் வழக்கமாகும் என்பதற்கு

இவ்வுரையும்   சான்றாக விளங்குகிறது.

 

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :19. பரிமேலழகர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :19. பரிமேலழகர்.

   திருக்குறள் அதிகாரம்-46: சிற்றினம் சேராமை, இவ்வதிகாரத்தின் குறிப்புரையில் சிற்றினத்தார் யாவர் என்பதைக் குறித்து…..”அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை, சிறிய இனமாவது ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்’ என்போரும் (புறநானூறு -29.) விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப் பொருந்தின் பெரியாரைத் துணைக்கோடல் பயன் இன்று என்பது உணர்த்தற்கு இஃது அதன் பின் வைக்கப்பட்டது. என்று கூறியுள்ளார்.

இக்குறிப்புரையில்  அவர் குறிப்பிட்டவாறு ‘விடர் = காட்டுமிராண்டிகள் ;தூர்த்தர் = காமுகன் ;  நடர் = கூத்தாடிகள்  முதலிய குழுவினர்கள்  சிற்றினத்தவர் ஆவர்.

இவர்களோடு ஒட்டும் உறவுமின்றி  மக்கள்  வாழ்வாராயின் நாடு நலம் பெறும்.

 

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

அன்புடையீர் வணக்கம் …!

 

அன்புடையீர் வணக்கம் …!

களப்பாள் வலைப்பூவின் அன்பிற்கினிய ஆர்வலர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்  வாழ்த்துகளை வழங்கி மகிழ்கின்றேன்.

நண்பர்களே..!  ஓரிரு மாதங்கள் களப்பாள் வலைப்பூ, தாய்லாந்து, இலாவோசு நாட்டிலிருந்து இயங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவில் சந்திப்போம்…..!   

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :18. மாங்குடி மருதனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :18. மாங்குடி மருதனார்.

 குடவோலைத் தேர்தல்.

                      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டை ஆளும் அமைப்புமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தி வந்துள்ளனர் என்பதை மிகத்தெளிவாக அறியமுடிகிறது.

                            “வரலாற்றில் மிகவும் முற்பட்ட பண்டைய கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமானியர்கள் காலத்திலேயே தேர்தல்கள் அமலுக்கு வந்துவிட்டிருந்தன. மத்திய காலக் கட்டத்தில் புனித ரோமானிய பேரரசர் மற்றும் போப்பாண்டவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது. அரசாங்கப் பதவிகளுக்காகப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன ‘தேர்தல்’ முறை 17ஆம் நூற்றாண்டுவரை உருவாக வில்லை,அந்தக் காலக்கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்த து .” விக்கிப்பீடியா.

  தமிழ்நாட்டில் குடவோலைத் தேர்தல்:

“கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்

பொறி கண்டழிக்கும் ஆவண மாக்களின்.” – மாங்குடி மருதனார், அகநானூறு: 77.

ஊராண்மைக் கழங்கட்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தற் பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின்கண் போட்ட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர்முன் குட்த்தின் மேலிட்ட இலச்சினையைக் கண்டு, நீக்கி உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்பட்டார் இவரென முடிபு செய்வதோர் வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை  என்று கூறப்படும். பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. – அறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை,.

 இன்றும் பலர் குடவோலைத் தேர்தல்  குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுச் செய்தியையே கூறிவருகின்றனர்.

உத்திரமேரூர் கல்வெட்டில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல் தமிழகத்தில் குடவோலை முறையில் தேர்தல் நடந்ததற்கான சான்று அகநானூற்றில் கிடைத்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவே மிகவும் தொன்மைவாய்ந்த  தேர்தல் நடமுறையாகும்.

 

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :17. கணியன் பூங்குன்றனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :17. கணியன் பூங்குன்றனார்.

உலகமக்கள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைகொண்ட இப்பாடல், தமிழின் உயர்ந்த பெருமைக்கும் தமிழரின் அளப்பரிய அறிவாற்றலுக்கும். சான்றாக விளங்குகிறது இப்பாடல் .

உலகமக்களுக்கு வாழ்வின் உண்மைகளை எடுத்துரைக்கும் அரிய பாடலாகும். இப்பதிவைத் ”தமிழ் உலகு” இணையத்திலிருந்து எடுத்துள்ளேன்.  இப்பாடலின் அருமையான பொருட்செறிவைக் கருத்தில்கொண்டே, இதனை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

இதன் முதல் வரி மட்டுமே, புகழ்பெற்ற வரியாக பலரால் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

பாடலின்
எல்லா வரிகளும், வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....

முழுப் பாடலும்... அதன் பொருளும்....
உங்களுக்காக !

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....
சாதலும் புதுவது அன்றே;...
வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;

முனிவின் இன்னாது என்றலும் இலமே;
மின்னேர் வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது*

திறவோர்காட்சியின் தெளிந்தனம்...
ஆதலின் மாட்சியின்
பெயோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

கணியன் பூங்குன்றனார்.

பாடலின் வரிகளும், பொருளும்:

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."

தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.." (சாதலும் புதுவதன்றே..)

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னேர்* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*

எழுதியவர் ஊர் –கணியன் பூங்குன்றனார்.
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் தாலுக்கா
*மகிபாலன்பட்டி* கிராமத்தில்....

அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
வரவேற்கிறது....!

- மு.ந. மதியழகன் பகிர்தல் வழியாக அனுப்பியது.

நன்றியுடன் – தமிழ் உலகு  இணையம்.

புதன், 14 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :16. –கபிலர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :16. –கபிலர்.

“இம்மை போலக் காட்டி உம்மை

இடையில் காட்சி நின்னோடு

உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே.” புறநானூறு:236.

                   பாரியே…! இப்பிறப்பின்கண் நீயும் நானும் நட்புடன் இன்புற்று இருந்தவாறு போல, மறுபிறப்பிலும் கண் முன்னே இடைவிடாது தோன்றும் நின் காட்சியோடு கூடி வாழ்தலை உயர்ந்த ஊழ் கூட்டுவதாக….!.

 

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :15.- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :15.- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

 மகட்பேறு.

“சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்

கூனும் குறளும் ஊமும் செவிடும்

மாவும் மருளும் உளப்படவாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்றுஇவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியமில் என

முன்னும் அறிந்தோர் கூறினர்…. புறநானூறு, 28

சிறப்பில்லாத குருடும் வடிவற்ற தசைப் பிண்டமும் கூனும் குறுகிய தோற்றமும் ஊமையும் செவிடும் விலங்கு வடிவிலான தோற்றமும் அறிவின்றி மயங்கி இருப்பதும் ஆகிய எட்டுப் பெரிய குறைபாடுகள் மக்கள் பிறப்பில் உள்ளன. இவ்வுலகில் வாழ்வார்க்குப் பேதைத் தன்மையிலான பிறப்புகள், இவற்றால் யாதொரு பயனும் இல்லை என  நன்கு அறிந்தோர் முற்காலத்தில் கூறியுள்ளனர் என்று எடுத்தியம்புகின்றார்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :14. –பிசிராந்தையார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :14. –பிசிராந்தையார்.

                               வயதாகியும்  முடி நரைக்கவில்லையே..!

”யாண்டுபல வாக நரையில வாகுதல்

யாங்காகியரென வினவுதி ராயின்

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை

ஆன்று அவிந் தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.” –பிசிராந்தையார், புறநானூறு: 191.

                                       நரை தோன்றாமைக்குரிய காரணங்களை விரித்துரைக்கும் பிசிராந்தையார், தான் எல்லா நலன்களும் பெற்றுக் கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதால் இளமை கழிந்து, ஆண்டுகள் பல சென்றபோதும் தனக்கு நரை தோன்றவில்லை என்கிறார்.

                               மாட்சிமைப்பட்ட குணங்களை உடைய மனைவியுடன் பிள்ளைகளும் அறிவு நிரம்பினர் ; யான் கருதியதையே ஏவல் செய்வாரும் கருதுவர்.; அரசனும்  முறையல்லாதன செய்யானாய் மக்களைக் காப்பான்; இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஊரின்கண்  நற்குணங்கள் நிறந்து, உயர்ந்தோரிடத்து ப் பணிந்து ஐம்புலனும் அடங்கிய கொள்கையுடைய சான்றோர் பலர் வாழ்தலால்  கவலையின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதால்  நரை தோன்றவில்லை என்றார்.

சனி, 10 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :13. – மாங்குடி மருதனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :13. – மாங்குடி மருதனார்.

                                       உலகத் தோற்றம் – 3.

“ஓங்கு திரை வியன் பரப்பின்

ஒலி முந்நீர் வரம்பு ஆகத்

தேன் தூங்கும் உயர்சிமைய

மலை நாறிய வியல்ஞாலத்து

வல மாதிரத்தான் வளி கெட்ப

வியல் நாள் மீன் நெறி ஒழுகப்

பகற் செய்யும் செஞ்ஞாயிறும்

இரவுச் செய்யும் வெண் திங்களும்

மை தீர்ந்து கிளர்ந்து விளங்க

மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத்

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய

நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த

………………………………..மதுரைக்காஞ்சி: 1- 12.

                      அகன்ற நீர்ப்பரப்பில் உயர்ந்த அலைகள் எழுந்து ஒலிக்கும் கடலை எல்லையாகக் கொண்டு, தேன் அடைகள் தொங்குகின்ற  உயர்ந்த சிகரங்களைக் கொண்ட மலைகள் தோன்றிய இவ்வுலகத்தில், ஆகாயத்தின்கண் காற்று வலமாகச் சுழன்று வீசிற்று, அகன்று விளங்கும் நாள் மீன்கள், தாம் இயங்குவதற்குரிய பாதைகளில் பிறழாது இயங்கின.

பகற்பொழுதை உண்டாக்கும் சிவந்த கதிகளையுடைய ஞாயிறும், இரவுப் பொழுதை உண்டாக்கும் வெண்ணிறக் கதிர்களையுடைய திங்களும்  குற்றமில்லாமல் விளங்கித் தோன்றின. மேகங்கள் மழை வேண்டும் காலத்துப் பிழையாது  தம்முடைய பெய்தல் தொழிலால் உதவி புரிந்தன. அதனால் எல்லாத் திசைகளிலும் விளையுள் பெருகி வளம் கொழித்தது. ஒரு விதைப்பில் விதைத்த விதை  ஆயிரமாய்ப் பெருகி விளைந்தது. விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிர்க்கும் தாம் பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டு தவறாமல் வழங்கின.

                    நீர்ப் பரப்பு முதலில் தோன்ற , அதன்பின் நிலப்பரப்பு கடலிலிருந்து வெளிப்பட்டது. உலக அமைப்பு, காற்று மண்டிலம் விண்மீன்கள் இயக்கம் ஆகிய  உலகத்தோற்றம் குறித்த செய்திகள் அறிவியல் ஆய்வன்றோ..!

 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :12.-முரஞ்சியூர் முடிநாகராயர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :12.-முரஞ்சியூர் முடிநாகராயர். உலகத் தோற்றம் – 2.

”மண் தினிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை”

………………………… :புறநானூறு, 2.

அணுக்கள் செறிந்த நிலனும் ;அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்; 

அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும்; அக்காற்றின்கந்தலைப்பட்ட தீயும் ; 

அத்தீயோடு மாறுபட்ட நீரும் ;  என ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மை 

போல… இவ்வுலகம் விளங்குவதாகக் கூறுகின்றார் புலவர்.

       தொல்தமிழர்களின் சிந்தனைகள் இவ்வாறிருக்க, கி.பி.13 ஆம் நூற்றாண்டில் 

வாழ்ந்த , வெடி மருந்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ’ரோஜர் பேக்கன்,’ இந்த 

உலகம்  உருண்டையானது என்று கூறினார்,  அவருக்குப் பின்னே  கி.பி. 17 ஆம் 

நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி ‘கலிலியோ’ உலகம் 

உருண்டையானது என்று அறிவியல் வழி மெய்ப்பித்தார். அக்காலத்தில்  இவ்விரு 

அறிவியல் ஞானிகளுக்கும் கிடைத்த பரிசு, சிறைத்தண்டனை ; கிடைத்த பட்டம் 

பைத்தியக்காரர்கள்.


      தொல்காப்பியர் காலந்தொட்டே அறிவியலைப் புரிந்து போற்றும் அளவிற்குத் 

தமிழர்களுக்கு அறிவு இருந்தது, அதனாலன்றோ தொல்காப்பியர், திருவள்ளுவர் 

உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :11 . தொல்காப்பியர் .

 

சான்றோர் வாய் (மை) மொழி :11 . தொல்காப்பியர் .

உலகத் தோற்றம்.

வானியலில் வல்லுநர்களாகிய விளங்கிய தமிழர்கள் உலகத்தோற்றம் குறித்தும் சிந்தித்துள்ளனர். கி.மு. 585 இல் கிரகணம் தோன்றுவதை முன்கூட்டியே கணித்தவர் மை லீட்டஸ் தீவில் பிறந்த தேலிஸ், உலகம் எதனால் ஆனது என்ற கேள்வியைக் கேட்டு…… விடையாக….

                         இந்த உலகம் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூல காரணம் என்றார்.  தேலிசுக்குப் பின்வந்த சிலர் இந்த உலகம் நெருப்பால் ஆனது ; காற்றால் ஆனது என்றும் கூறினர். ஆனால் தொல்காப்பியர் ஒருவரே இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இவ்வுலகம் ஐம்பூதன்பூதங்களின் (பூதம் எனின் உருவமற்ற, பரந்து விரிந்த பொருள்) சேர்க்கை என்று மிகச் சரியாக எடுத்துரைத்தார்.

 

இந்த உலகம் எதனால் ஆனது என்று அறிஞர்கள் பலரும் பன்னெடுங்காலமாக ஆராய்ந்து வந்துள்ளனர்.

“நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

 இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.” -1589. என்கிறார் தொல்காப்பியர்.

அளத்தற்கரிய ஐம்பெரும் பொருள்களாகிய நிலம், தீ, நீர், வளி, விசும்பு எனும் ஐந்தும்  கலந்தும் மயங்கியும் கிடப்பது இவ்வுலகம் என்றார்.  

                      மேற்சுட்டியுள்ள நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர்.” உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல  நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமை படாது நிற்கும். அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார்.” என்பார்.

                            இதனால் எந்தக் கடவுளும் இவ்வுலகை உருட்டி வைக்கவில்லை என்பதும் விளங்குமன்றோ…!

                                         “ இவ்வுலகமும் உலகப் பொருள்களும் இவ்வைந்து பூதங்களால் உருவானவை. அழியும் போதும் இவ்வைந்தாகவே மாறும். மீட்டுருவாக்கம் பெற்று இவை சேர்ந்தும் பிரிந்தும் பலவகை பொருள்கள் ஆகின்றன. மனித உடலுட்படத் தோன்றியும் மறைந்தும் உலகம் நடக்கிறது.” என்று விளக்கம் தருகின்றார் பேராசிரியர் தமிழண்ணல்.

                         இவ்வண்ணம் சான்றோர் சிந்தனைகளை  அறிந்து அறிவை விரிவு செய்துகொள்வோமாக.