வியாழன், 8 ஆகஸ்ட், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :11 . தொல்காப்பியர் .

 

சான்றோர் வாய் (மை) மொழி :11 . தொல்காப்பியர் .

உலகத் தோற்றம்.

வானியலில் வல்லுநர்களாகிய விளங்கிய தமிழர்கள் உலகத்தோற்றம் குறித்தும் சிந்தித்துள்ளனர். கி.மு. 585 இல் கிரகணம் தோன்றுவதை முன்கூட்டியே கணித்தவர் மை லீட்டஸ் தீவில் பிறந்த தேலிஸ், உலகம் எதனால் ஆனது என்ற கேள்வியைக் கேட்டு…… விடையாக….

                         இந்த உலகம் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூல காரணம் என்றார்.  தேலிசுக்குப் பின்வந்த சிலர் இந்த உலகம் நெருப்பால் ஆனது ; காற்றால் ஆனது என்றும் கூறினர். ஆனால் தொல்காப்பியர் ஒருவரே இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இவ்வுலகம் ஐம்பூதன்பூதங்களின் (பூதம் எனின் உருவமற்ற, பரந்து விரிந்த பொருள்) சேர்க்கை என்று மிகச் சரியாக எடுத்துரைத்தார்.

 

இந்த உலகம் எதனால் ஆனது என்று அறிஞர்கள் பலரும் பன்னெடுங்காலமாக ஆராய்ந்து வந்துள்ளனர்.

“நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

 இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.” -1589. என்கிறார் தொல்காப்பியர்.

அளத்தற்கரிய ஐம்பெரும் பொருள்களாகிய நிலம், தீ, நீர், வளி, விசும்பு எனும் ஐந்தும்  கலந்தும் மயங்கியும் கிடப்பது இவ்வுலகம் என்றார்.  

                      மேற்சுட்டியுள்ள நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர்.” உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல  நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமை படாது நிற்கும். அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார்.” என்பார்.

                            இதனால் எந்தக் கடவுளும் இவ்வுலகை உருட்டி வைக்கவில்லை என்பதும் விளங்குமன்றோ…!

                                         “ இவ்வுலகமும் உலகப் பொருள்களும் இவ்வைந்து பூதங்களால் உருவானவை. அழியும் போதும் இவ்வைந்தாகவே மாறும். மீட்டுருவாக்கம் பெற்று இவை சேர்ந்தும் பிரிந்தும் பலவகை பொருள்கள் ஆகின்றன. மனித உடலுட்படத் தோன்றியும் மறைந்தும் உலகம் நடக்கிறது.” என்று விளக்கம் தருகின்றார் பேராசிரியர் தமிழண்ணல்.

                         இவ்வண்ணம் சான்றோர் சிந்தனைகளை  அறிந்து அறிவை விரிவு செய்துகொள்வோமாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக